Wednesday 9 April 2014

தேர்தல் ஆணையத்திடம் பணிந்தார் மம்தா. . .

ஆட்சியர் உள்ளிட்ட 7 அரசு அதிகாரிகள் இடமாற்ற விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி செவ்வாய்க்கிழமை பணிந்தார்.மேற்கு வங்க மாநிலத்தில், மக்களவைத் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு மாவட்ட ஆட்சியர், 4 காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்பட 7 அதிகாரிகளுக்கு எதிராக தேர்தல் ஆணையத்திடம் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதையடுத்து அவர்கள் 7 பேரையும் தேர்தல் பணியில் இருந்து விடுவித்தும், அவர்களை இடமாற்றம் செய்தும், அவர்களுக்குப் பதிலாக வேறு அதிகாரிகளை நியமனம் செய்தும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவு குறித்து கருத்து தெரிவித்திருந்த அந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, அதிகாரிகளை இடமாற்றம் செய்ய முடியாது என்றும், இதற்காக தன்னை கைது செய்தாலும் கவலையில்லை, விளைவுகளை சந்திக்க தயார் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு சவால் விடுத்திருந்தார்.மம்தா கோரிக்கையை தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை மாலை நிராகரித்து விட்டது. இதுதொடர்பாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகையில், "மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அனுப்பிய கடிதத்துக்கு தேர்தல் ஆணையம் தனது பதிலைத் தெரிவித்துள்ளது. அதில், மேற்கு வங்க அரசின் கோரிக்கை குறித்து பரிசீலிக்கப்பட்டதாகவும், இருப்பினும் அதனை ஏற்க முடியாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.தேர்தல் ஆணையம் கெடு: ஏப்ரல் 7ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை (அதிகாரிகள் 7 பேர் இடமாற்றம் மற்றும் அந்தப் பணியிடங்களில் தேர்தல் ஆணைய உத்தரவுப்படி புதிய அதிகாரிகளை நியமித்தல் தொடர்பான உத்தரவு) புதன்கிழமை காலை 10 மணிக்குள் மேற்குவங்க அரசு நிறைவேற்ற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கெடு விதித்திருந்தது.
தேர்தலை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்பதே தேர்தல் ஆணையத்தின் குறிக்கோள் என்றும், எனவே அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படவில்லை எனில், சம்பந்தப்பட்ட மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்படும் அல்லது ஒத்திவைக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்ததாக தகவல்கள் தெரிவித்தன.கண்டனம்: இந்நிலையில் மம்தா பானர்ஜியின் நடவடிக்கையை மக்களவை முன்னாள் சபாநாயகர் சோமநாத் சாட்டர்ஜி உள்ளிட்டோரும் கண்டித்தனர்.இதுகுறித்து சோம்நாத் சாட்டர்ஜி கருத்து தெரிவிக்கையில், "அரசியலமைப்பு சட்டத்தின்படி தேர்தல் தொடர்பான அறிவிப்பு வெளியானது முதல், அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு முழு அதிகாரம் உள்ளது. ஆனால் முதல்வர் மம்தா பானர்ஜி வினோதமாகப் பேசுகிறார்.
இதனால் சட்ட சிக்கல்தான் உருவாகும். இந்த விவகாரம் தவறான முன்மாதிரியை ஏற்படுத்திவிடும். எனவே இந்த விவகாரத்துக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும்' என்றார்.திடீர் முடிவு: அதிகாரிகள் இடமாற்ற விவகாரம் தனக்கு பெரும் சிக்கலாகி வருவதை உணர்ந்த மம்தா பானர்ஜி, தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ஏற்பதாக திடீரென அறிவித்தார்.                                 ----  தினமணி 

No comments: