Monday 4 July 2016

செப்.2 வேலைநிறுத்தத்திற்கு பொதுத்துறை ஊழியர் சங்கங்கள் கூட்டு பிரகடனம்.

செப்டம்பர் 2 வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்கிடுவோம் என மத்திய பொதுத்துறை ஊழியர் சங்கங்களின் கூட்டம் பிரகடனம் செய்துள்ளது.மத்திய அரசின் பொதுத்துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் தெலுங்கானா ஹைதராபாத் நகரத்தில் காந்திபவனில் ஜூலை 2 ஆம் தேதியன்று நடைபெற்றது.இதில் இந்தியாவில் உள்ள மத்திய பொதுத்துறை சங்கங்களின் தலைவர்களும் சம்மேளன நிர்வாகிகளும் ஊழியர்களும் திரளாக கலந்து கொண்டனர்.அக்கூட்டத்திற்கு CITU அகில இந்திய துணை பொதுச் செயலாளர் தேவ்ராய் தலைமை தாங்க, INTUC அகில இந்திய தலைவர் ஜி.சஞ்சீவிரெட்டி துவக்க உரை ஆற்றினார்.
அவரது உரையில் மோடி அரசு பின்பற்றிவரும் கொள்கைகளினால் பொதுத்துறை நிறுவனங்கள் பாதிக்கப்படுவது குறித்தும் தொழிலாளர்களை பாதிக்கின்ற வகையில் தொழிலாளர் சட்டங்களை திருத்தும் போக்கையும் ஒப்பந்தத் தொழிலாளர் எண்ணிக்கை கூடுதல் ஆகிவரும் நிலையில் அவர்களது பணிநிலைமைகள் கடுமையாக பாதிக்கப்படுவது குறித்தும் பேசி செப்டம்பர் 2 வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்கிட வேண்டியது அவசியம் என்றார். CITU அகிலஇந்திய பொதுச்செயலாளர் தபன்சென் வேலைநிறுத்தப்பிரகடனத்தை முன்மொழிந்து பேசினார்.மத்திய அரசானது பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதற்கு திட்டமிடுதல் மட்டுமல்லாமல் நிதி ஆயோக் நேரடியாக தலையிட்டு, 74 பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளை விற்பதோடு கொடூரமான முறையில் தனியார் மயமாக்கும் நடவடிக்கை எடுத்து வருவதையும் தொழிற்சங்க உரிமை பறிப்பு ,தொழிலாளர் சட்டங்களை சீரழித்தல், பொதுத்துறை ஊழியர்களின் பணிநிலைகளை மாற்றி அமைத்தல், பொதுத்துறையின் நிர்வாகத்தில் தனியார் நிறுவனங்களின் அதிகாரிகளை அனுமதித்தல், ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஒழித்து நிரந்தரப்படுத்துதல், ஊதியப் பேச்சுவார்த்தை தொடங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளின் பிரகடனத்தை வெளியிட்டு செப்டம்பர் 2 அன்று வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்கிடும் பிரகடனத்தை முன்மொழிந்தார்.
அதை AITUC தலைவர் எச்.மகாதேவன், தெலுங்கானா CPSTU கன்வீனர் ஜி.எல்லையா, டி.நாராயணராவ் (HMS), LPF தலைவர் சண்முகம், ஸ்டீல் பி.கே. தாஸ், நமது BSNLEU, P. அபிமன்யு, G.S,  எல்.மீனாட்சிசுந்தரம் (பெங்களூரு கன்வீனர்), பெட்ரோலியம், அஞ்சல்துறை உட்பட பல சம்மேளன தலைவர்கள் வழிமொழிந்தனர். சிறப்பான முறையில் பிரச்சாரம் செய்து செப்டம்பர் 2 வேலைநிறுத்தம் வெற்றி பெற உறுதிமொழி எடுத்தனர். தமிழகத்திலிருந்து கே.விஜயன், நீர்வழிப்போக்குவரத்து டி.நரேந்திரராவ், சென்னை துறைமுகம் கிருஷ்ணமூர்த்தி, நெய்வேலி ஜெயராமன், சீனுவாசன், BHEL திருச்சி சம்பத், பிரபு,NTECL எச்.சதீஷ், பவர்கிரிட் அரசு உட்பட 35 பேர் கலந்து கொண்டனர்.

No comments: