Tuesday 1 November 2016

தமிழகத்துடன் இணைந்த கன்னியாகுமரிக்கு61வது பிறந்த நாள்!

திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தானத்தின் ஆளுகையில் இருந்த குமரி மாவட்டம், செங்கோட்டை தாலுகா கடந்த 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி தாய் தமிழகத்துடன் இணைந்தது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு, செங்கோட்டை, நெய்யாற்றின்கரை, தேவிகுளம், பீர்மேடு, சித்தூர் ஆகிய ஒன்பது தாலுகாக்களில் அகஸ்தீஸ்வரம், தோவாளை, விளவங்கோடு, கல்குளம் ஆகிய நான்கு தாலுகாக்கள் இணைந்து குமரி மாவட்டம் உதயமானது. இதில் செங்கோட்டை தாலுகா திருநெல்வேலி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. ஆனால் இந்த ஒன்பது தாலுகாக்களையும் தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்பதற்காக நாகர்கோவிலில் 'திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்' என்ற அமைப்பு 1945ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தான தமிழ் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டம் தீவிரமடைந்தபோது இதனை ஒடுக்க அரசு அடக்குமுறையை கையாண்டது. இந்நிலையில் 1954ம் ஆண்டு போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது. இதனையடுத்து தேவிகுளம், பீர்மேடு தாலுகாக்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடையை மீறிய மார்ஷல் நேசமணி, ரசாக், சிதம்பரநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். புதுக்கடையில் 1954ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி துப்பாக்கிச் சூடு நடந்தது. இச்சம்பவத்தில் அருளப்பநாடார், முத்துசுவாமி, செல்லப்பாபிள்ளை, பீர்முகமது ஆகியோர் உயிரிழந்தனர். போராட்டம் ஓயவில்லை என்பதை உணர்ந்த அரசு அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம், விளவங்கோடு மற்றும் செங்கோட்டை தாலுகாக்களை 1956ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி தமிழகத்துடன் இணைத்தது. அன்று தமிழக முதல்வராக இருந்த காமராஜர் தலைமையில் நாகர்கோவில் எஸ்.எல்.பி., மேல்நிலைப்பள்ளியில் இதற்கானவிழாநடந்தது.

No comments: