Tuesday 15 July 2014

காவிரி நடுவர் மன்றம் - தமிழகத்தின் கோரிக்கை நிராகரிப்பு...

ஏழு ஆண்டுகளுக்கு பிறகு தில்லியில் செவ்வாயன்று நடைபெற்ற காவிரி நடுவர் மன்றக் கூட்டத்தில், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பான விளக்க மனுவை விசாரிக்க வேண்டும் என்ற தமிழகஅரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக, கடந்த 2007ம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பளித்தது. இதில், காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 419டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்து, தமிழகம், புதுச்சேரி , கர்நாடகா ஆகிய மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. அதேநேரத்தில், இந்த தீர்ப்பு குறித்து விளக்கம் கேட்டு தமிழகமும், புதுச்சேரியும் காவிரி நடுவர் மன்றத்தில் மனுத் தாக்கல் செய்தன.இந்த நிலையில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றக் கூட்டம் ஜூலை 15- செவ்வாயன்று மீண்டும் நடைபெற்றது.இதில், 2007ஆம் ஆண்டுதீர்ப்பு குறித்து விளக்கம் கேட்கப்பட்ட மனு மீது விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதற்கு கர்நாடக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தநிலையில், முந்தைய தீர்ப்பைஎதிர்த்து உச்ச நீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், அதன் மீதான தீர்ப்பு வெளியான பின்னரே, இந்த பிரச்சனையில் தாங்கள் விசாரணை நடத்த முடியும் என கூறி, தமிழக அரசின் கோரிக்கையை காவிரி நடுவர் மன்றம் நிராகரித்து விட்டது.
கர்நாடகா எதிர்ப்பால் நிராகரிப்பு:காவிரி நடுவர் மன்ற விசாரணையின்போது, கர்நாடக அரசின் எதிர்ப்பின் காரணமாகவே, தமிழக அரசின்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தாக புதுவை அரசுத் தரப்பு வழக்கறிஞர் நம்பியார் தெரிவித் துள்ளார்.இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பான விளக்க மனுக்கள் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தான், நடுவர் மன்றத்தில் தமிழக அரசு முன்வைத்த கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கர்நாடக வழக்கறிஞர் கூறியுள்ளார்.
ஏமாற்றமளிக்கிறது: பெ.சண்முகம்:காவிரி நடுவர்மன்றத்தின் நிராகரிப்பு தமிழக விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றம் அளித்துள்ளது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார். ஏற்கெனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததன் விளைவாக, உரிய தண்ணீர் தமிழக விவசாயிகளுக்கு கிடைக்காத நிலை தொடர்கிறது. இதனால் குறுவை சாகுபடியும், சம்பாவும் காய்ந்துபோகும் நிலைமை தொடர்கிறது. இந்நிலையில், காவிரி நடுவர்மன்றத்தின் தீர்ப்பு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு இணையானது என்ற நிலையில், உச்சநீதிமன்றத் தின் தடையுத்தரவு ஏதும் இதற்கு இல்லை என்ற நிலையிலும் கூட நடுவர் மன்றம் தமிழகத்தின் கோரிக்கையை நிராகரித்திருப்பது துரதிருஷ்டவசமானது என அவர் தெரிவித்தார்.

No comments: