Saturday 21 June 2014

ஜூன் 21 - உலக இசை தினம் - இசை மனங்களை இணைக்கும்

போர் நாடுகளைப் பிரிக்கிறது, இசை மனங்களை இணைக்கிறதுஎன்று இசைப்பிரியர்கள் பெருமையாகக் கூறுவது ஒன்றும் பீற்றல் அல்ல. உண்மையும் அதுதான். அப்படிப்பட்ட இசையை போற்றிப் பாராட்டுவதுடன் பாதுகாக்கவும் வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் வகையில் உலகில் உள்ள 32 நாடுகளில் ஜூன் 21ம் தேதியை உலக இசை தினமாகக் கொண்டாடுகிறார்கள். வாழ்வியல் நீரோட்டங்களில் இசைக்கென்று தனியிடம் கொடுத்துள்ள இந்தியாவும் இந்த நாடுகளில் ஒன்றாகும். இந்தப் பட்டியலில் இடம் பெறாத நாடுகள் எல்லாம் இசைக்கு எதிரிகள் என்ற முடிவுக்கு யாரும் வந்து விடக்கூடாது. அந்நாடுகளில் தங்கள் வசதிக்கேற்ப, கலாச்சாரத்துக்கேற்ப வேறு தினங்களில் இசை தினத்தைக் கொண்டாடி வருகின்றனர். உதாரணமாக அர்ஜெண்டினாவில் வசந்தம் தொடங்கும் முதல் நாளான செப்டம்பர் 21 அன்று இசை தினம் கொண்டா டப்படுகிறது.
உலகின் முதல் இசை தினம் பிரான்சில் 1982ம் ஆண்டில் கொண்டாடப்பட்டது. 1976ம் ஆண்டில் அமெரிக்க இசைக் கலைஞர் இந்த ஆலோசனையை பாரீஸில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் முன்வைத்தார். கோடையில் பூமத்திய ரேகையை விட்டு சூரியன் வெகுதொலைவில் இருக்கும் நாளன்று இரவு முழுவதும் இசைக் கொண்டாட்டங்களை நடத்தி மகிழ்ந்திருக்க வேண்டும் என்று அவர் கூறினார். இந்த நாளை நமது நாட்டில் சங்கராந்தி என்று கூறுகிறார்கள். இந்தக் கொண்டாட்டங்கள் இசைக்கு எல்லையில்லை என்பது உண்மை என்று கூறுவது போல் பிரான்சுடன் நின்று விடவில்லை. உலக நாடுகள் முழுவதும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. நாட்கள் தான் மாறுபடுகின்றன. இந்தியாவிலும் உலக இசை தினம் கொண்டாடப்படுகிறது உலக இசை தினத்தன்று தெருவெங்கும் இலவச இசைக் கச்சேரிகள், நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்று இசை தின வழிகாட்டல்கள் கூறுகின்றன. ஆனால் நம் நாட்டில் அப்படி கச்சேரிகள் நடப்பதாக தகவல்கள் இல்லை. கோவில்களில் கூட இலவசமாக பாட மறுக்கும் நம் இசைக் கலைஞர்கள் இதற்கு சம்மதித்து வருவார்களா என்று தெரியவில்லை. இந்திய இசைக்கு ஒரு தனி பாரம்பரியம் உண்டு. ஆன்மீகத்திலும், ஆரோக்கியத்திலும், விவசாயத்திலும் அதற்கு ஒரு பங்கு உண்டு என்று கூறுவார்கள். ஆன்மீகத்தில் கண்ணன் ஒரு முரளிதரன் ஆவார்.
நாதஸ்வர இசையால் தாவரங்களை நன்கு விளைய வைக்க முடியும் என்று அண்மைக்கால ஆய்வுகள் கூறுகின்றன.இந்திய நாட்டில் இசை இல்லாத இடம் இருக்க முடியாது. குழந்தை பிறந்தவுடன் பாடப்படும் தாலாட்டு முதல் ஆவி அடங்கிய பின் பாடப்படும் ஒப்பாரி வரை இசை இல்லாத வாழ்வியல் நிகழ்வுகள் இல்லை என்று கூறும் அளவுக்கு இசை இந்த மண்ணோடு பின்னிப் பிணைந்தது. திரை இசைப்பாடல்கள் பற்றி கூறவே வேண்டாம். துன்பம் நேர்கையில் யாழெடுத்துப்பாடி இன்பம் சேர்க்க மாட்டாயா என்று தொடங்கி ஒரு நாள் போதுமா, இசை கேட்டால் புவி அசைந்தாடும் என்று எத்தனை பாடல்கள் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளன. ஹரிதாஸ் படம் பாடலுக்காகவே மூன்று தீபாவளிகள் கழிந்தும் ஓடியதாகக் கூறப்படுவதும் தமிழகத்தில் இசைக்கிருந்த மகத்துவத்தை சுட்டிக்காட்டுகின்றன. இந்திய திரையுலகில் மாஸ்ட்ரோ பட்டம் பெற்ற இளையராஜாவும், ஆஸ்கர் விருது பெற்ற ரஹ்மானும் தமிழர்கள் என்பது நமது நெஞ்சை நிமிர்த்துகின்றன. இசை மனிதனின் வாழ்வோடு இணைந்த ஒன்று.
இசையை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. அமைதியாகவும் இருந்திட முடியாது என்று பிரெஞ்சு கவிஞர் விக்டர் ஹூ`யூகோ குறிப்பிடுகிறார். இசை தமிழர்களின் வாழ்வில் இணைந்து விட்ட ஒரு கலை. இசைக்கு மயங்காதோர் யாரும் இல்லை.உலக இசை தினத்தில் சில மணி நேரம் இசையைக் கேட்டு மனம் மகிழ்வோம். மனிதர்கள் இசைபட வாழ இசை அவசியமானதொன்றாகும்.

No comments: