Saturday 1 February 2014

தொழிற்சங்க -கலங்கரை விளக்கம் - தோழர் கே.ஜி.போஸ்

இந்தியாவில் தபால் தந்தி ஊழியர்களின் தொழிற்சங்க வரலாற்றோடு பின்னிப்பிணைந்தது தோழர் கே.ஜி.போஸ் அவர்களின் வாழ்க்கை என்றால் மிகையல்ல. இந்தியாவில் ஒரு போர்க்குணமிக்க தொழிற்சங்க இயக்கத்தை கட்டியவர்களில் முக்கியமானவர்க ளில் ஒருவர். மேற்குவங்கத்திற்கே உரித்தான எளிமையாக, தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தபோதும் வாழ்க்கை முழுவதும் ஏழ்மை துரத்திக் கொண்டிருந்தபோதும் தான் கொண்ட லட்சியத்தில் இருந்து பிறழாதவர். ஏராள மான தொழிற்சங்கத் தலைவர்களை உருவாக்கியவர். அப்படிப்பட்ட உன்னத மான தலைவரின் வாழ்க்கை வரலாற்றை தொழிற்சங்கப்பணியில் உள்ளவர்கள் மட்டுமல்லாது பொதுவாழ்வில் தங்களை இணைத்துக்கொண்ட அனைவரும் படிக்கவேண்டியது அவசியமாகும்.
சுதந்திர இந்தியாவில் தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டபோது அடக்குமுறைக்கு எதிராகவும் பழிவாங்கலுக்கு இடையிலும் சக்தி மிக்க போராட்டங்களுக்கு வியூகம் அமைத்து அதனை வெற்றிகரமாக வழிநடத்திச் சென்று தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்க இயக்கத்திற்கும் முன் உதாரணமாக அமைந்தவர் கே.ஜி.போஸ். அவர் எப்போதும் தொழிற்சங்க ஒற்றுமையைப் பேசினார். கூட்டு இயக்கத்தின் அவசியத்தை வலி யுறுத்தினார். இதனால் தான் சங்க வித்தியாசம் இன்றி அவருக்கு தொழிலாளர்கள் மத்தியில் மகத்தான ஆதரவு இருந்தது. வேறு எந்த துறையிலும் இல்லாத வகையில் தபால் தந்தி துறையில்தான்ஈடிஎன்ற தற்காலிக தொழிலாளர்கள் அதிகமாக இருந்தனர். அவர்களுக்காக தொடர்ச்சியாகப் போராடிய தலைவர் கே.ஜி.போஸ். ஈடி ஊழியர்களை நிரந்தர இலாகா ஊழியர்களுடன் ஒப்பிட முடியாது என்று நிர்வாகத்தின் கருத்துடன் சில தொழிற்சங்கத் தலைமை ஒத்துப்போன போது, அத்தகைய சமரசவாத தலைமைகளுக்கு எதிராக சரியான பதிலடியை கொடுத்து, ஈடி ஊழியர்களின் கோரிக்கைக ளுக்காக அகில இந்திய அளவில் தில்லியில் கோரிக்கை மாநாடு ஒன்றையும் நடத்தி போராட்ட திட்டங்களை வகுத்து தந்தவர் போஸ்.
மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்காக ரயில்வே, தபால் தந்தி உள்ளிட்ட அனைத்துத்துறை ஊழியர்களையும் மேற்கு வங்கத்தில் இணைத்து 3வது ஊதியக்குழு அமைக்கக் காரணமாக இருந்தார்.ஒன்றுபட்ட சங்கத்தில் தலைமையில் இருந்தவர்கள் நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டபோது ஒத்த கருத்துள்ள அனைவரையும் அணி திரட்டி சந்தர்ப்பவாத நிலையை மேற்கொண்டவர்களின் நிலை தவறு என்பதை அவர் நிரூபித்தார். புரட்சிகரமான தொழிற்சங்க இயக்கம் என்பது வெறும் பொருளாதார கோரிக்கைகளுக்கு மட்டுமல்லாமல் மக்களை பாதிக்கக்கூடிய அனைத்து பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர் போஸ். மதச்சார்பின்மையை உயர்த்தி கடை பிடித்தகாரணத்தால் தான் நாடு சுதந்திரம் அடைந்தபோது, வங்கப்பிரிவினையின் போது மேற்கு வங்காளத்தில் இந்து- முஸ்லீம் ஒற்றுமைக்காக உயிரையும் பொருட் படுத்தாது தொழிலாளர்களை திரட்டி தெருவில் இறங்கி துணிச்சலாக செயல்பட்ட வர் போஸ். இந்து முஸ்லீம் இளைஞர்கள் முன்னணியை ஏற்படுத்தி ஒற்றுமையை பாதுகாத்ததோடு மத வெறியர்களிடமிருந்து சிறுபான்மையினரை பாதுகாத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு பிரிவினையை நோக்கிச் சென்றபோது கொல்கத்தாவில் பெருந்திரளாகத் திரண்டிருந்த தொழிலாளர் களிடையே போஸ் உரையாற்றும்போதுஇந்துக்களும் முஸ்லீம்களும் சகோதரர்கள். இந்த பிரிவினை எங்கள் நெஞ்சங்களைக் கனக்கவைக்கிறது. பாசத்துடன் நேசத்துடன் பழகிவந்த சகோதரர்கள் பிரியும் இத்தருணத்தில் ஒன்றாக அமர்ந்து பணியாற்றிய இடத்தில் மேஜைகளையும் நாற்காலிகளை யும் பிரிக்க எங்களுக்கு எப்படி மனம் வரும்? ’’ என்று அவர் குறிப்பிட்டபோது கண்ணீர் விடாத தொழிலாளர்களே இல்லை. போனஸ் என்பது பிச்சையல்ல. அது தொழிலாளர்களின் உரிமை என்று அவர் குரல் கொடுத்தபோது சில தொழிற்சங்கத் தலைவர்கள் எள்ளி நகையாடினார்கள். அனைவருக்கும் போனஸ் என்றால் எவருக் கும் போனஸ் இல்லை என்றனர். ஆனால் தொடர்ச்சியான போராட்டம் காரணமாக வரலாறு கே.ஜி.போஸ் கூற்று சரியென நிரூபித்துள்ளது. தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக பல முறை சிறை சென்ற தோழர் கே.ஜி. போஸ் மேற்குவங்க சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி யுள்ளார்.
மார்க்சிய கொள்கைகளின் பால் இறுதிவரை போராடிய அவரை கொடு மையான புற்றுநோய் ஆட்கொண்டிரா விட்டால் மேலும் பல ஆண்டுகள் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடியிருப்பார். உழைப்பாளி மக்களின் முன்னேற்றமே தனது லட்சியமாகக் கொண்டிருந்த போஸ் போன்ற தலைவர்களின் வாழ்க்கை வரலாறு என்றென்றும் தொழிற்சங்க இயக்க முன்னோடிகளுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழும். அந்த வகையில் தொலைபேசித் துறையில் இருந்து ஒய்வு பெற்ற ஊழியர் தோழர் ஆர். விஜயலட்சுமி தொகுத்துள்ளகே.ஜி.போஸ்- தபால் தந்தி தொழிற்சங்க இயக்கத்தில் ஒரு சகாப்தம்என்ற நூல் அனைவரும் படித்து கற்றுணர வேண்டிய நூலாகும்.
 கே. ஜி. போஸ்தபால் -தந்தி தொழிற்சங்க இயக்கத்தின் ஒரு சகாப்தம், ஆர். விஜயலட்சுமி வெளியீடு: பாரதி புத்தகாலயம்7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டைசென்னை - 600 018பக்: 112 விலை ரூ. 60.

No comments: