Sunday 11 October 2015

10.10.15 "ஆச்சி மனோரமா" மறைந்தார் - வாழ்க்கைப் பாதை...

தமிழ் திரையுலகில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக கோலோச்சிய ஆச்சி மனோரமாவின் வாழ்க்கைப் பாதையை திரும்பிப் பார்க்கிறோம்.... 
மனோரமாவை  ரசிகர்களால் ஆச்சி என அன்போடு அழைக் கப்படும் மனோரமா, 1937-ம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிறந்தார். குடும்ப சூழ்நிலை காரணமாக இவரது குடும்பம் ராமநாதபுரம் மாவட்டம் பள்ளத்தூருக்கு குடிபெயர்ந்தது. அங்குள்ள ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்ற அவர், சிறுவயதிலிருந்தே பாடுவதில் ஆர்வம் கொண்டிருந் தார். அந்தமான் காதலி என்ற நாடகத்திலும் மனோரமா நடித்தார்.அந்தமான் காதலியில் அவருடைய குரல் இனிமை யையும், நடனத்தையும் பார்த்த, நாடக இயக்குநரின் உதவியாளர்திருவேங்கடமும், நாடகத்திற்கு ஆர்மோனியம் வாசித்த தியாகராஜனும் "கோபிசாந்தா" என்ற அவரது இயற்பெயரை மனோரமா என மாற்றினார்கள். தொடர்ந்து நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், நாடக உலகில் ராணி என்று போற்றும் அளவிற்கு உயர்ந்தார். 1958-ம் ஆண்டு மாலையிட்ட மங்கை என்ற படத்தில் நகைச்சுவை நடிகையாக சினிமாவில் மனோரமாவை அறிமுகப்படுத்தினார் கவியரசர் கண்ணதாசன்திரைப்படத்தில் நடித்த பிறகும், நாடகங்களில் நடித்து வந்த அவர், களத்தூர் கண்ணம்மா, கொஞ்சும் குமரி, பாலும் பழமும், பார் மகளே பார், திருவிளையாடல், அன்பே வா, தில்லானா மோகனாம்பாள், சரஸ்வதி சபதம், பட்டிக்காடா பட்டணமா, கலாட்டா கல்யாணம் என பல வெற்றிப் படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் தனக்கெனத் தனி இடம் பிடித்தார்.1960 முதல் 1970 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நாகேஷ் - மனோரமா ஜோடி நகைச்சுவை உலகில் கொடி கட்டிப் பறந்தது. பின்னர், சோ, தேங்காய் சீனிவாசனுடன் ஜோடி சேர்ந்து நகைச்சுவை உலகில் தொடர்ந்து கோலோச்சினார் ஆச்சி மனோரமா. பாட்டி சொல்ல தட்டாதே, நடிகன், மன்னன், சின்ன கவுண்டர், சிங்கார வேலன், அண்ணாமலை, எஜமான், ஜென்டில்மேன், அருணாசலம், பாண்டவர் பூமி, பேரழகன் என அவரது நடிப்பில் வெளியாகி, வெற்றி படங்கள் அதிகம். 
மாலையிட்ட மங்கை படத்தில் சினிமா வாழ்க்கையைத் தொடங்கிய ஆச்சி மனோரமா, ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்து, தமிழ்த் திரையுலகிற்கு பெருமை சேர்த்தார். தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சிங்களம் என பல மொழிகளிலும் தனக்கே உரித்தான நடிப்பில் முத்திரைப் பதித்துள்ளார்.அன்புள்ள அம்மா, அவள், அல்லி ராஜ்யம் உள்பட பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். தமிழ் திரையுலகம் தந்த முதலமைச்சர்களான அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஆந்திர முதலமைச்சர் என்.டி.ஆர் என 5 முதலமைச்சர்களுடன் பணியாற்றிய பெருமைக்குச் சொந்தக்காரர் ஆச்சி மனோரமா சினிமாவில் நகைச்சுவை, குணச்சித்திரம் என இவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே கிடையாது என்று கூறும் அளவிற்கு, 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் கோலோச்சியவர் மனோரமா.
ஒரு சாதாரண மேடை நடிகையாக கலையுலக வாழ்க்கையைத் தொடங்கி, எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என உச்ச நட்சத்திரங்களுடன் நடித்தவர் மனோரமா. இன்றும், இளைய தலைமுறை நடிகர்களுடன் நடித்து, திரையுலகப் பயணத்தை தொடர்ந்தார் ஆச்சி மனோரமா.தமிழக அரசு கலைத்துறையில் வழங்கும் உயரிய விருதான கலைமாமணி விருதைப் பெற்றவர் மனோரமா. கடந்த 2002-ம் ஆண்டு அவருக்கு பத்ம ஸ்ரீ விருது கொடுத்து கவுரவித்தது மத்திய அரசு. கேரள அரசின் கலா சாகர் விருது, சிறந்த குணச்சித்திர நடிகைக்கான அண்ணா விருது, எம்.ஜி.ஆர் விருது என பல்வேறு விருதுகளைப் பெற்ற ஆச்சி மனோரமாவுக்கு, கடந்த மார்ச் 8ம் தேதி வாழ்நாள் சாதனையாளருக்கான சக்தி விருதை வழங்கி பெருமைப்படுத்தியது புதிய தலைமுறை தொலைகாட்சி நிறுவனம் என்பது குறிப்பிட தக்கது. ஆச்சி மானோரமா அவர்களுக்கு நமது அஞ்சலியையும் இணைக்கின்றோம்.

No comments: