Friday 30 May 2014

பிரதமர் அலுவலகத்தில் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம் . . .

பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அரசாங்கத்தின் பிரதான மையங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதிக்கம் நுழைய துவங்கிவிட்டது.புதிய பிரதமர் மோடி பொறுப்பேற்றவுடன், பிரதமர் அலுவலகத்தின் இணையதளத்தை புதுப்பித்து முகவரியுடன் கூடிய தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் ஆர்எஸ்எஸ் அமைப்பை பற்றி எழுதப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் என்பது இந்தியாவில் சமூக மற்றும் கலாச்சார மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒரு சமூக - கலாச்சார அமைப்புஎன்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் வாழ்க்கையைப் பற்றி குறிப்பிடும்போது, ஆர்எஸ்எஸ் அமைப்பில் அவர் பணியாற்றினார் என்பதை விரிவாக சொல்கிற அந்தக் குறிப்பில், ஆர்எஸ்எஸ் அமைப்பை பற்றியும் விரிவாக எழுதப்பட்டுள்ளது.இந்திய வரலாற்றில் பிரதமரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பை பற்றி புகழ்பாடி எழுதப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், இந்த பிரதமர், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் சோசலிச, மதச்சார் பற்ற மற்றும் ஜனநாயக இயல்பை உயர்த்திப் பிடிப்பேன் என்று நாட்டு மக்களுக்கு உறுதி கூறி பதவிப் பிரமாணம் எடுத்திருக்கிறார் என்பதுதான்.ஆனால், பிரதமர் அலுவலக இணையதளத்தில் குறிப் பிடப்பட்டிருப்பதற்கு நேர்மாறாக ஆர்எஸ்எஸ் அமைப்பு தன்னைப் பற்றி, தனது சொந்த இணையதளத்தில் எழுதி யிருக்கும் வார்த்தைகள் முற்றிலும் முரண்பட்டவை. அந்தஇணையதளத்தில் தனது சிந்தாந்தம் குறித்து ஆர்எஸ்எஸ் அமைப்பு இவ்வாறு எழுதியுள்ளது: “சங் அமைப்பின் சிந்தாந்தம் என்பது, ஒட்டுமொத்த சமூகத்தையும் அணிதிரட்டுவதன் மூலமாகவும், இந்து தர்மத்தை பாதுகாப்பதை உறுதி செய்வதன் மூலமாகவும் இந்த தேசத்தின் புகழ் மங்காமல் இருக்கச் செய்ய பணியாற்றுவதே.
இந்த இலக்கை குறிக்கோளாகக் கொண்டு, தனது திட்டத்துடன் பணியாற்றுவதற்கான வழிமுறைகளை சங் அமைப்பு உருவாக்கியிருக்கிறது.”பிரதமர் அலுவலகத்தில் புதிய இணையதளத்தில், முன்புஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக இருந்தது உள்பட நரேந்திரமோடி வாழ்க்கையின் தனிப்பட்ட விஷயங்களும் இடம் பெற்றுள்ளன. தனது 17 வயதில் மோடி வீட்டை விட்டு, வெளியேறினார் என்றும், மீண்டும் திரும்பி வந்து ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்தார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.கடந்த காலங்களில், ஆர்எஸ்எஸ் அமைப்புடனான தனிப்பட்ட நபர்களின் பிணைப்பு என்பது பெயரளவிற்கே அரசு நிகழ்வுகளில் குறிப்பிடப்பட்டு வந்தது.
அடல்பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. உதாரணத்திற்கு, 2001 ஆகஸ்ட்டில் ஆர்எஸ் எஸ் அமைப்பின் மறைந்த தலைவர் லெட்சுமண் ராவ் இனாம்தாரைப் பற்றி அப்போது பாஜகவின் பொதுச் செயலாளர்களில் ஒருவராக இருந்த நரேந்திரமோடி எழுதிய நூல் ஒன்றை, தனது அரசு இல்லத்தில் பிரதமர் வாஜ்பாய் வெளியிட்டார். அந்நிகழ்ச்சிக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் கே.எஸ்.சுதர்சன் அழைக்கப்பட்டிருந்தார். அது பிரதமர் நடத்திய ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சி என்ற அளவிலேயே இருந்தது.அந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், ஆர்எஸ்எஸ் அமைப் பின் மறைந்த தலைவர் இனாம்தார் தொடர்பாகவும் அறிந்துகொள்ள வேண்டிய மற்றொரு தகவலும் உண்டு.
இனாம்தாரை, வக்கீல் சாகேப் என்றும் குறிப்பிடுவார்கள். அவரைப் பற்றி விழாவில் வாஜ்பாய் பேசும்போது, (சுபாஷ்சந்திரபோஸின்) இந்திய தேசிய ராணுவத்தின் கதாநாயகர்களுக்கு ஆதரவாக வாதாடினார் என்று குறிப்பிட்டார். ஆனால் அதே நேரத்தில், மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அதுதொடர்புடைய ஆர்எஸ்எஸ் ஊழியர்களை பாதுகாப்பதற்கும் இதே வக்கீல் சாகேப்தான் வாதாடினார் என்பது தனிக்கதை.(மே 30 பிஸினஸ் லைன் ஏட்டில்வெளியாகியுள்ள செய்தியிலிருந்து)

No comments: