Wednesday 17 September 2014

தொழிலாளர் சட்டங்களை சீர்குலைக்காதே!-T.U எச்சரிக்கை.

மத்திய அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் டிசம்பர் 5 அன்றுதேசிய எதிர்ப்பு நாள்அனுசரித்திட அனைத்து மத்தியதொழிற்சங்கங்கள் மற்றும்சுயேச்சையான தேசியசம்மேளனங்களின் கூட்டு மேடை பிரகடனம் செய்துள்ளது.தலைநகர் புதுதில்லியில் திங்களன்று அனைத்து மத்தியத் தொழிற்சங்கங்கள், மத்திய மாநில அரசு ஊழியர்களின்சுயேச்சையான தேசிய சம்மேளனங்கள் மற்றும் அமைப்புகளின் கூட்டுமேடையின் சார்பில் சிறப்பு மாநாடு நடைபெற்றது.சிறப்பு மாநாட்டில் சிஐடியு அகில இந்திய தலைவர் .கே. பத்மநாபன், பொதுச் செயலாளர் தபன் சென் எம்.பி. உட்பட நூற்றுக்கணக்கான பிரதிநிதிகள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.சிறப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரகடனம் வருமாறு:மத்திய அரசும் பல்வேறு மாநிலஅரசுகளும் தன்னிச்சையாக தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்திட முயற்சி மேற்கொண்டிருப்பதற்கு தொழிற்சங்க கூட்டு மேடை ஆழ்ந்தகவலையைத் தெரிவித்துக் கொள்கிறது.
சட்டத் திருத்தங்களில்பல தொழிலாளர்கள், ஊழியர்களின் தொழிற்சங்க உரிமைகள் உட்பட தொழிலாளர்களின் பணி நிலைமைகளில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்திடும். தொழிலாளர் நலச் சட்டங்களில் திருத்தங்கள் செய்யப்படுவதற்கு முன் தொழிற்சங்கங்களை அழைத்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று தொழிலாளர் நல அமைச்சர்அளித்திட்ட உறுதிமொழியையும் மீறி இவ்வாறு முயற்சி எடுக்கப்பட்டுவருவது துரதிர்ஷ்டவசமானது.2014 ஜூலை 31 அன்று ராஜஸ்தான்சட்டமன்றத்தில் தொழிலாளர் நலச் சட்டங்கள் பலவற்றில் நிறைவேற்றப்பட்டுள்ள திருத்தங்கள், தொழிலாளர்களைவேண்டும்போது வேலைக்கு எடுத்துக்கொண்டு வேலை முடிந்ததும் வெளியேற்றுவதுஎன்ற மோசமான கொள்கையை நிறைவேற்றுவதை வேலையளிப்பவர்களுக்கு மிகவும் எளிதாக்கி இருக்கிறது.இச்சட்டத்திருத்தங்கள் மூலம் ஏராளமான சிறிய மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள், தொழிற்சாலைகள் என்னும் வரைமுறைக்குள் வராமலேயே தப்பித்துக் கொள்ளும்.அதேபோல் ஒப்பந்தத் தொழிலாளர்களை வைத்திருக்கும் ஒருவர் தனக்குக் கீழ் 20 தொழிலாளர்களை வைத்திருந்தால் பதிவு செய்ய வேண்டும் என்கிற சட்டப்பிரிவை 50- என மாற்றி இருப்பதன்மூலம் அநேகமாக அனைத்து ஒப்பந்ததாரர்களும் இச்சட்ட வரையறையின்கீழ் வராமல் தப்பித்துக்கொள்வார்கள். மேலும் முன்மாதிரி வேலையளிப்பவராக இருக்க வேண்டியமத்திய அரசும், மாநில அரசுகளும்கூட மிகவும் மோசமான விதத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமித்து, அவர்களுக்கு பணிப்பாதுகாப்போ, சமூகப் பாதுகாப்போ இல்லாமல் செய்துள்ளன.இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.நாடாளுமன்றத்தில் தொழிற்சாலை சட்டம் மற்றும் பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்களுக்கு திருத்தங்கள் செய்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு சட்டமுன்வடிவுகளும் இவ்வாறு தொழிலாளர்களின் பணி நிலைமைகளைக் கடுமையாகப் பாதிக்கக் கூடியவைகளேயாகும். இவ்வாறு கொண்டுவரப்பட்டுள்ள சட்டமுன்வடிவுகள் ராஜஸ்தான் மாநிலத்தில் செய்துள்ள சட்டத்திருத்தங்களை நியாயப்படுத்தக்கூடிய விதத்திலேயே அமைந்துள்ளன. மேலும் கொண்டு வரப்படும் திருத்தங்கள், தொழிலாளர் அமைப்புகளைக் கலந்து பேசி முடிவுகள் எடுக்கும் முறையை ஒழித்துக்கட்டக்கூடிய விதத்தில் அமைந்துள்ளன.ஒட்டுமொத்தத்தில் மத்திய அரசும், ராஜஸ்தான் மாநில அரசும் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள அனைத்துத் திருத்தங்களும் வேலையளிப்பவர்கள் தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்வதற்கும், ஆலைகளை தங்கள் இஷ்டம்போல் இழுத்து மூடுவதற்கும், மிகப்பெரிய அளவில் ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமிப்பதற்கும் வகை செய்கின்றன.நாட்டிலுள்ள தொழிலாளர்களில் 70 சதவீதத்தினரை தொழிலாளர் நலச் சட்டங்களின் வரையறையிலிருந்து நீக்கக்கூடிய விதத்தில் இத்திருத்தங்கள் அமைந்துள்ளன. அதன்மூலம் வேலையளிப்பவர்கள் தங்கள் இஷ்டம்போல் தொழிலாளர்களைக் கசக்கிப்பிழியவும், சுரண்டவும் வகை செய்கின்றன.மேலும் மத்திய அரசு, சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் (ஐஎல்ஓ) தீர்மானத்தின் அடிப்படையில் 43வது, 44வது மற்றும் 45வது இந்தியத் தொழிலாளர் மாநாடுகள் பரிந்துரைத்தபடி மாதத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச ஊதியம் அளித்திடவும், ஒப்பந்த ஊழியர்களுக்கும் நிரந்தர ஊழியர்களுக்கு இணையான ஊதியம் அளித்திடவும் மறுக்கிறது. மேலும் விலைவாசியைக் கட்டுப்படுத்திடவும், வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்கிடவும் மத்தியத் தொழிற் சங்கங்கள் முன்வைத்த பத்து அம்சக் கோரிக்கைகளையும் பரிசீலிக்க மறுக்கிறது.மேலும் மத்திய அரசு இன்சூரன்ஸ், ரயில்வே, ராணுவம் மற்றும்பல்வேறு துறைகளிலும் அந்நியநேரடி முதலீட்டை அனுமதித்திடவும், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்குத் தாரை வார்த்திடவும் மிகவும் பிற்போக்குத்தனமான முறையில் நடவடிக்கைகள் எடுத்துவருவதையும் தேசிய மாநாடு கண்டிக்கிறது.மத்திய-மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத, ஊழியர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக அணிதிரளுமாறு அனைத்துத் தொழிலாளர்களையும், ஊழியர்களையும் தேசிய மாநாடு அறைகூவி அழைக்கிறது.மத்திய-மாநில அரசுகளின்ஊழியர் விரோத -தொழிலாளர்விரோத நடவடிக்கைகளைஊழியர்கள்/தொழிலாளர்கள் மத்தியில் கொண்டுசெல்லக்கூடிய விதத்தில் (1) மாநில அளவில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சிறப்பு மாநாடுகள் நடத்திடவும், மாவட்ட மற்றும் தொழிற்சாலை மட்டங்களில் சிறப்பு மாநாடுகள் நடத்திடவும்; (2) 2012 டிசம்பர் 5 அன்று மாநிலத் தலைநகர்களிலும், புதுதில்லியிலும் தேசிய எதிர்ப்பு நாள் அனுசரித்திடவும் தீர்மானிக்கிறது.இவ்வியக்கங்களை மகத்தானமுறையில் வெற்றி பெறச்செய்யுமாறு அனைத்துத் தொழிலாளர்களையும், ஊழியர்களையும் தேசிய மாநாடு கேட்டுக்கொள்கிறது.இவ்வாறு அந்தப் பிரகடனத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments: