Wednesday 8 October 2014

NOKIA -நவ.1மூடல்-தொழிலாளர்களைப் பாதுகாக்க CPI(M).

ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா ஆலை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.  கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை:
சென்னை ஸ்ரீபெரும்புதூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள நோக்கியா செல்பேசி உற்பத்தி ஆலை நவம்பர் 1 முதல் மூடப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. நோக்கியாவை சமீபத்தில் விலைக்கு வாங்கிய மைக்ரோ சாப்ட் நிறுவனம் சென்னையில் இயங்கும் செல்பேசி நிறுவனத்துடன் செல்பேசிக்கான ஒப்பந்தம் செய்ய முன்வரவில்லை என்று சொல்லி நிறுவனத்தில் பணியாற்றிய 6800 தொழிலாளர்களை கடந்த சில மாதங்களுக்கு முன் வலுக்கட்டாயமாக வெளியேற்றியது.தற்போது உற்பத்தியை நிறுத்தி வைப்பு என அறிவித்து மீதமுள்ள 800 தொழிலாளர்களையும் வெளியேற்ற முனைகிறது. இந்த ஆலைமூடல் அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.2006ம் ஆண்டு நோக்கியா நிறுவனம் தொழில் தொடங்குவதற்கு குறைந்த விலையில் நிலம், தடையற்ற மின்சாரம், வரிச்சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை மத்திய, மாநில அரசுகளிடம் பெற்றது. குறைந்த சம்பளத்தில் தொழிலாளர்களை வேலைக்குஅமர்த்தியது. தொழிலாளர் நலச் சட்டங்கள் அமலாக்கப்படவில்லை. தொழிற்சங்க உரிமைகள் மறுக்கப்பட்டன. தொழிலாளர்கள் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு ஆளானார்கள்.இவற்றையெல்லாம் பயன்படுத்தி பெருமளவு செல்பேசிகளை உற்பத்தி செய்து பலஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்த இந்நிறுவனம் மத்திய, மாநில அரசுகளுக்கு செலுத்த வேண்டிய வருமான வரியை கூட செலுத்தவில்லை. இந்நிலையில் உற்பத்தி நிறுத்தி வைப்பு என்று சொல்லி நவம்பர் 1 முதல் ஆலையை மூடி 800க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலையிலிருந்து வெளியேற்ற திட்டமிட்டுள்ளது. எனவே நோக்கியா நிறுவனத்தின் சட்டவிரோத ஆலை மூடலை தடுத்து நிறுத்தவும், ஆலையில் பணி செய்யும் தொழிலாளர்களை பாதுகாக்கவும் தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்து கிறது.என்எல்சி தொழிலாளர் வேலை நிறுத்தம்நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணியாற்றும் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் சமவேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 36 நாட்களாக போராடி வருகின்றனர். நியாயமான கோரிக்கைகளை முன்னிறுத்தி போராடும் தொழிலாளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்கள் பிரச்சனைகளை என்.எல்.சி. நிர்வாகம் தொழிற்சங்கங்களோடு பேசி தீர்வு காண முன்வராத காரணத்தால் தொழிலாளர்களின் போராட்டம் நீடிக்கும் நிலை உள்ளது. எனவே இந்தப் பிரச்சனையில் தலையிட்டு தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை எடுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.

No comments: