Wednesday 1 October 2014

அருவருப்பளிக்கும் அழுக்கைப் போக்கிட முன்வருக...

தூய்மையான இந்தியாவும், சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறையும் ஒரே சமயத்தில் இருக்க முடியாது. அமெரிக்காவில் உள்ள இந்திய மக்களிடம், பிரதமர் நரேந்திர மோடியும், அவருடன் சக அமைச்சர்களும் கைகளில் விளக்கமாறுகளை ஏந்திக்கொண்டு, செய்தியாளர்களின் புகைப்படங்களில் சிக்குவதற்காக வரிசையில் மகிழ்ச்சிப் பெருக்குடன் நின்று கொண்டிருந்திருக்கிறார்கள். “இந்தியாவைத் தூய்மைப் படுத்துவோம்’’ என்று மகாத்மா காந்தியின் பிறந்த நாளான வரும் அக்டோபர் 2 அன்று துவங்கும் இயக்கத்தை வெற்றிகரமாக்கிட உறுதி பூண வேண்டும் என்ற முறையில்தான் அவர்கள் இவ்வாறு புகைப்படங்களின் முன் பாவனை செய்தார்கள்.
அப்போது பிரதமர் மோடி, காந்திஜியின் 150ஆவது பிறந்த நாள் கொண்டாடப்படவிருக்கும் 2019க்குள், இந்தியாவை தூய்மைப்படுத்திட வேண்டும் என்று இந்தியப் பிரஜைகளுக்கு அறைகூவல் விடுத்திருக்கிறார். காந்திஜிக்கு மோடி அளிக்கக்கூடி மிகப்பெரிய மரியாதையாக எது இருக்கும் என்றால், நம் சமுதாயத்தில் காணப்படும் அருவருப்பளிக்கும் உண்மையான அழுக்கு - தீண்டாமை மற்றும் சாதி அடிப்படையிலான சுரண்டலை - போக்கிட முன்வருவதுதான்.சென்ற மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் பிகானீர் மாவட்டத்தில், பள்ளிக்கூடத்தில் உயர்சாதி ஆசிரியருக்காக வைக்கப்பட்டிருந்த மண்பானையிலிருந்த தண்ணீரை எடுத்து குடித்ததற்காக, இரு தலித் மாணவர்கள் அடித்து நொறுக்கப்பட்டு, பள்ளிக்கூடத்திலிருந்து வெளியேற்றப் பட்டிருக்கின்றனர். இன்று இதையும் விட இழிவான முறையில், தாழ்த்தப்பட்ட சாதியைச்சேர்ந்தவர் என்பதால் பீகார் முதல்வர் சென்று வந்த கோவில் சுத்தப்படுத்தப்பட்டதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்திருக்கின்றன.தேசிய குற்றப் பதிவேடுகள் நிலையத்தின் அறிக்கையின்படி, தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் 2012ஆம் ஆண்டில் 16.7 சதவிகிதமாக இருந்தது, 2013ஆம் ஆண்டில் 19.6 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது.
அதேபோல் பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் 2012இல் 5.7 சதவிகிதமாக இருந்தது, 2013இல் 6.5 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. மனித மலத்தை மனிதனே சுமக்கும் நடைமுறை, மனித மலத்தை கீழ்சாதி சமூகத்தினர் சுத்தப்படுத்தும் நடைமுறை, இன்னமும் தொடர்கின்றன. தெற்காசிய மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு இயக்குநர் மீனாட்சி கங்குலி, இந்நடைமுறையை, “தீண்டாமையின் மிகவும் மோசமான அடையாளங்கள்’’ என்று குறிப்பிடுகிறார்.அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு இந்தியர்களால் கட்டப்பட்டுள்ள மாடிசன் சதுக்கத்தில் உரைநிகழ்த்துகையில் மோடி, காந்திஜியை நினைவு கூர்ந்து, “அவர் மிகவும் புகழ்பெற்ற வெளிநாட்டு இந்தியர்’’ என்று புகழ்ந்திருக்கிறார். ஆனால், மோடி அவர்களே, சாதிப் பாகுபாடற்ற தூய்மை இந்தியாவை உங்களால் கொண்டுவர முடியுமா? அவ்வாறு கொண்டு வருவீர்களானால் அதுதான் காந்திஜிக்கு அளிக்கப்படும் மிகச்சிறந்த மரியாதையாகும்
.நன்றி: தி பிசினஸ் லைன் .

No comments: