Friday 11 October 2013

வால்மார்ட்- பார்தியின் பங்குகளை முழுமையாக விழுங்கி...

 பார்தி நிறுவனத்தை விழுங்கியது வால்மார்ட்
அமெரிக்காவின் பகாசுரக் கம்பெனியான வால்மார்ட், இந்தியாவிற்குள் அதிகாரப்பூர்வமாக நுழைவதற்கு முன்பே, இந்தியாவில் தன்னுடைய வணிகத்தைபார்தி எண்டர்பிரைசஸ் லிமிடெட்என்னும் நிறுவனத்துடன் கூட்டாக செய்து வந்தது. சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டிற்கு நாட்டில் கட்டுப்பாடுகள் இருந்ததால், வால்மார்ட் நிறுவனம் இப்படி ஓர் ஏற்பாட்டைச் செய்து கொண்டிருந்தது. 2007ஆம் ஆண்டில் பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் 50:50 என்ற விகிதத்தில் வால் மார்ட் கூட்டு சேர்ந்தது.2010ஆம் ஆண்டில் பார்தி நிறுவனத்திற்குச் சொந்தமான செடார் சப்போர்ட் சர்வீசஸ் என்னும் நிறுவனத்தில் 100 மில்லியன் டாலர்கள் மூலதனத்தை முதலீடு செய்தது. 2012இல் இந்திய ரிசர்வ் வங்கி, அமலாக்கப் பிரிவினர் மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சரகம் இது தொடர்பாக அந்நிய நேரடி முதலீடு விதிகள் மீறப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டி, விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி இருந்தன. ஆனால் மன்மோகன் அரசாங்கத்தின் அரவணைப்பு வால்மார்ட் நிறுவனத்துக்கு முழுமையாக இருந்ததால் அப்படி விசாரணை எதுவும் நடைபெறவில்லை.இப்போது பார்தி நிறுவனத்தின் பங்குகளை முழுமையாக வால்மார்ட் நிறுவனம் வாங்கிவிட்டது. வால்மார்ட் ஆசியா நிறுவனத்தின் தலைவரான ஸ்காட் பிரைஸ் இது தொடர்பாகக் கூறுகையில், ‘‘சுயேச்சையாக இயங்குவது என்கிற முடிவு இரு தரப்பினருக்குமே பயன் அளிக்கும். இந்தியாவில் வால்மார்ட்டின் முதலீடுகளின் மூலம் இந்தியாவிற்கும் இந்திய மக்களுக்கும் சேவை செய்திட விரும்புகிறோம்’’ என்று கூறிக் கொண்டார்.
வால்மார்ட் நிறுவனம் பார்தியின் பங்குகளை முழுமையாக விழுங்கியதன் மூலம், பார்தி - வால்மார்ட் கூட்டு முடிந்தது. வால்மார்ட் உள்ளிட்ட பன்னாட்டு பெரும் நிறுவனங்கள் இந்திய சில்லரை வர்த்தகத்தில்நுழைந்தால் சுமார் 20 கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று இடதுசாரிக் கட்சிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. இந்நிலையில் வால்மார்ட்டுக்கு பார்தி போன்ற பெரும் நிறுவனமே பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments: