Monday 24 June 2013

BSNL நிதி ஆதாரத்தை உயர்த்த
       
நாடு தழுவிய விழிப்புணர்வு பிரச்சாரம்.


தோழர்களே ! 

ரூபாய் 8,000 கோடிக்கும் அதிகமான நஷ்டத்தில் BSNL இருக்கும் இத்தருணத்திலும், ஊழியர்களுக்கு தம் சம்பளத்தில் கணிசமான உயர்வை தரும் 78.2 சத IDA இணைப்பை நாம் கூட்டமைப்பின் மூலம் வென்றெடுத்துள்ளோம். ஒன்றிணைந்த போராட்டத்தின் மூலம் நாம் இதனை சாதித்திருக்கின்றோம் என்பதும் உண்மை. நாட்டில் வேறெங்கும் இதுபோன்று நஷ்டத்தில் இயங்கும் எந்த நிறுவனமும் தம் ஊழியர்களுக்கு இதுபோன்ற ஊதிய உயர்வுக்கு ஒத்துக்கொண்டதில்லை என்பதும் நிதர்சனமான உண்மை. ஆகவே இத்தருணத்தில் நமது BSNL-ஐ நிமிரச்செய்து, லாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவது, நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.  இதற்காக நாம் கடினமாக உழைத்து நமது BSNL-ன் சேவைத் தரத்தை உயர்த்தி வருவாயை அதிகரிக்க வேண்டும். 

நமது வாடிக்கையாளர்களுடன் கனிவுடன் நடந்து அவர்களை திருப்தியடையச் செய்வதன் மூலம், BSNL-க்கு அதிகமான வாடிக்கையாளர்கள் வர ஆவண செய்யவேண்டும். சுருங்கக்கூறின், நாம் நமது “வேலைக் கலாச்சாரத்தை” மேம்படுத்தவேண்டும். 

தொழிற்சங்க மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு நிச்சயமாக அரசாங்கத்தின் BSNL விரோத கொள்கைகளிருந்து BSNL-ஐ காப்பாற்ற தவறாது. கூட்டமைப்பு உரிய காலங்களில் உபகரணங்கள் மற்றும் இதர பொருட்களும் கிடைக்க ஆவண செய்யும். ஆனால் மற்றெல்லாவற்றையும் விட, BSNL ஊழியர்களாகிய நாம் நமது நிதி வளத்தை முன்னேற்றுவதற்க்கு கடினமான முயற்சியுடன் கூடிய சிறந்த பங்களிப்பை வழங்கவேண்டும். 

ஆம், இதுவே நாம் ஒன்றுகூடி நமது நிறுவனத்திற்க்கு கைமாறு செய்ய சரியான தருணம். ஆதலால் இதற்கான நாடு தழுவிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை கூட்டமைப்பு நடத்தவுள்ளது. ஆகவே நாம் அனைவரும் ஒன்றுகூடி இதனை மாபெரும் வெற்றியாக்க வேண்டும். 

என்றும் தோழமையுடன் 
எஸ். சூரியன் 
மாவட்ட செயலர் 

No comments: