Friday 31 October 2014

திரும்பி வராத பணத்துக்காதீவிர நடவடிக்கை நாடகம்?

வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கறுப்புப்பணத்தை மீட்டால் இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.3 லட்சம் கொடுக்க முடியும் என்று எவ்வளவு சவடாலாக தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக முழங்கியது! வீட்டுக்கு அவ்வளவு பணம் வராவிட்டாலும், மொத்தக் கறுப்புப்பணமும் மீட்கப்பட்டால் அரசுப் பொறுப்பிலேயே அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி வழங்க முடியும், அனைவருக்கும் தரமான மருத்துவ சேவைகளை உறுதிப்படுத்த முடியும் என்றெல் லாம் நினைத்து அக்கட்சிக்கு வாக்களித்தவர்கள் உண்டு. நரேந்திர மோடி பதவியேற்றதும் முதல் நடவடிக்கையாக, இதற்கான சிறப்பு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டது.உச்சநீதிமன்றக் கட்டளையின்படி அந்தக் குழுவை அமைப்ப தன்றி அரசுக்கு வேறு வழியில்லை என்பதை மறைத்தார்கள் இப்போது மக்களிடம் வேறொரு உண்மை மறைக்கப்படுகிறது. சில வங்கிகளிடமிருந்து வாடிக்கையாளர்களின் பெயர்ப்பட்டியல்கள் வந்துள்ளன. முதலில், அதில் உள்ள அனைவரின் பெயர்களையும் தெரிவிக்க இயலாது என்பதால், வரி ஏய்ப்புக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்போரின் பெயர்களை மட்டும் தெரிவிக்க ஏதுவாக ஆணையைத் திருத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது அரசு. நீதிபதிகள் அதை நிராகரித்த பிறகும், மூன்று பேர்களின் பெயர்களை மட்டும் அரசு தெரிவித்தது. எல்லோரின் பெயர்களையும் தெரிவிக்க நீதிமன்றம் கிடுக்கிப்பிடி போட்ட பிறகு, 627 பேர்களின் பெயர்களை மோடி அரசு முத்திரையிடப்பட்ட உறையில் வைத்து அளித்திருக்கிறது.அந்தப் பெயர்களை வெளியிடுவது குறித்து இனி நீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும். இந்நிலையில், அந்தப் பட்டியலால் அரசுக் கருவூலத்திற்கு ஏதேனும் வருவாய் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால், அந்த 627 பேர்களில் பெரும்பாலோர், சம்பந்தப் பட்ட வங்கிகளுக்குக் கடிதம் அனுப்பப்பட்ட தகவல் கிடைத்தபின் இத்தனை நாட்களில் தங்களது முந்தைய கணக்குகளில் இருந்த பணத்தை வேறு கணக்குகளுக்கு மாற்றி விட்டனர்! பலர் தங்கள் கணக்குகளையே முடித்துக்கொண்டு விட்டனர்! அதாவது இப்படிப்பட்ட நழுவல் உத்திகளுக்கான அவகாசம் தரப்பட்டிருக்கிறது!பட்டியலிலுள்ள 150 பேர் ஏற்கெனவே கணக்கில் காட்டப்படாத பணத்திற்கான வரியை அவசரமாக செலுத்தியிருக்கிறார்கள்.
அப்படிச் செய்தால் தண்டனை நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட மாட்டாது என்று, சட்டவிரோதமாகப் பதுக்கப்பட்ட பணத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கு வழி செய்ததே மோடி அரசுதான். முன்பு இதே போல் மன்மோகன் சிங் அரசு செய்தபோது, கறுப்புப்பணத்தை வெள்ளையாக்க உதவுவதா என்று கடுமையாக விமர்சித்தது இதே பாஜக-தான்.பெரும்பாலான கணக்குகள் வெளிநாடுகளில் இதற்கென்றே ஏற்படுத்தப்பட்ட அறக்கட்டளைகளின் பெயர்களில் தொடங்கப்பட்டவை. அவற்றின் மூல நபர்களை இந்திய புலனாய்வு அமைப்புகளால் கண்டுபிடிக்க முடியாது என்று கூறப்படுகிறது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றச்சாட்டுகளை மறுக்கும் நிலையில், வழக்குகள் முடிவதற்கே பல ஆண்டுகளாகும்! இவையனைத் தையும் காரணம் காட்டி, கறுப்புப் பணத்தை மீட்க சட்டச் சிக்கல்கள்தான் தடையாக இருக்கின்றன என்று பாஜக அரசு தப்பித்துக்கொள்ள முயலக்கூடும். கடத்தப்பட்டிருப்பது இந்திய மக்க ளின் உழைப்பிலிருந்து உறிஞ்சப்பட்ட பணம் என்பதால், அப்படி தப்பிப்பதற்கு அனுமதிக் கலாகாது.

மீனவர்களை மீட்க விரைந்து செயல்படுக! அரசுக்கு-CITU...

சென்னை, அக். 30-தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் அளித்துள்ள தூக்கு தண்டனையை ரத்து செய்து இந்தியா கொண்டுவர மத்திய-மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு மாநிலத் தலைவர் .சவுந்தரராசன் எம்எல்ஏ, பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.
கடந்த 5 மாதத்திற்கு முன்பு மத்தியில் பாஜக வெற்றிபெற்ற, பிரதமர் மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கை அதிபர் ராஜபக்சே, இலங்கை சிறைகளில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், விடுதலை செய்வதாக அறிவித்தும் இந்திய மீணவர்களை விடுதலை செய்யவில்லை; ஒரு பொய்க்குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, இன்று வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.“தமிழகத்தில் இந்த தீர்ப்பால் இராமநாதபுரம் மாவட்டத்தில் குறிப்பாக மீனவர்கள் பகுதிகளில் பெரும் கொந்தளிப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.மேலும் இந்த தீர்ப்பு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதற்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையினரின் தொடர் அத்துமீறல்களுக்கும், தாக்குதல்களுக்கும் உள்ளாகி வரும் தமிழக மீனவர்கள், போதைப்பொருள் கடத்தல் என்ற உண்மைக்கு மாறான குற்றச்சாட்டில் தூக்கு தண்டனைக்கு ஆளாகும் அளவிற்கு நிலையும் ஏற்பட்டுள்ளதுஎன்று குறிப்பிட்டுள்ள சிஐடியு தலைவர்கள் மத்திய-மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு, இலங்கை அரசைத் தொடர்பு கொண்டு தூக்கு தண்டனையை ரத்து செய்து, 5 மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கைமேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். சிஐடியு மீன்பிடித் தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர்கள் செலஸ்டின், பா.கருணாநிதி ஆகியோரும் இதை வலியுறுத்தியுள்ளனர். 
இராமேஸ்வரத்தில் கொந்தளிப்பு
இராமேஸ்வரம் : 5 மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்த தகவல் வெளியானவுடன் இராமேஸ்வரம் தீவில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த மீனவர்களின் உறவினர்கள், மீன்பிடி தொழிற்சங்க (சிஐடியு) மாநிலச் செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல், ஐஸ்டீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே. கருணாகரன், அசோக், முத்துப்பாண்டி உட்பட 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தங்கச்சி மடத்தில் சாலைமறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்கள் தூக்கு தண்டனைக்கு கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்...

தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

ஆயிரக்கணக்கான தொழிலாளர் குடும்பங்கள் தவிப்பு: நோக்கியா ஆலை மூடலை கண்டுகொள்ளாத அரசுகள் - தொடர்ந்து நடத்த வேண்டும் என கோரிக்கை...ஸ்ரீபெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரம் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த சுமார் 50 கிராமங்ளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வந்த நோக்கியா செல்போன் தயாரிப்பு ஆலை நாளை முதல் தனது உற்பத்தியை முற்றிலும் நிறுத்தவுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் சிறப்புப் பொருளாதார மண்டலமாக மாற்றப்பட்டதையடுத்து கடந்த 2006 முதல் நோக்கியா ஆலை செயல்படத் தொடங்கியது. வீட்டு வாசல் வரை கம்பெனி பஸ் வசதி இருந்ததால் ஏராளமான பெண்களும் பணியில் சேர்ந்தனர். உலக செல்போன் தேவையில் 30 சதவீதத்தை பூர்த்தி செய்து வந்த நோக்கியா, சாம்சங் போன்ற நிறுவனங்களின் அசுர வளர்ச்சியால் சரிவை சந்திக்கத் தொடங்கியது. இந்த நிலையில் கடந்த ஜனவரியில் வருமான வரித்துறை நடத்திய ஆய்வில் கம்பெனி 2006 முதல் இதுவரை ரூ.21,150 கோடி வரி பாக்கி வைத்துள்ளதை கண்டுபிடித்து அதை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.கடந்த ஆண்டு செப்டம்பரில் நோக்கியாவை விலைக்கு வாங்கிய மைக்ரோ சாப்ட் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூர் ஆலையை எடுத்துக்கொள்ள மறுத்தது. எனினும் ஒப்பந்த அடிப்படையில் ஆலை நடத்தப்படும் என ஏப்ரலில் நோக்கியா கூறியது. அதேநேரம் விருப்ப ஓய்வுத்திட்டத்தையும் அறிவித்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் கொடுத்து வீட்டுக்கு அனுப்பியது.இந்நிலையில், வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் உற்பத்தியை முற்றிலும் நிறுத்தப்போவதாக நோக்கியா அறிவித்தது. மைக்ரோ சாப்ட் நிறுவனம் தொடர்ந்து வேலை வழங்கும் என எதிர்பார்ப்பில் இருந்துவந்த மிச்சமிருக்கும் 851 தொழிலாளர்களும் பெரிதும் கலங்கிப்போயுள்ளனர். உதிரிபாகம் அளித்து வந்த பாக்ஸ்கான் நிறுவனமும் டிசம்பருக்குப் பிறகு இயங்காது என்று தெரிகிறது. இதில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான தொழி லாளர்களும் வழியின்றி தவிக் கின்றனர்.இது தொடர்பாக தொழிலாளர் துறை உதவி ஆணையர் (சமரசம்) தரப்பில் விசாரித்தபோது, ‘தொழிலாளர்கள், நோக்கியா நிர்வாகம் மற்றும் அரசு ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கும் முத்தரப்புக் கூட்டம் நாளை நடக்கிறது. முன்னதாக நிர்வாகமும், தொழிலாளர்களும் சுமுகமாக பேசிவிட்டு வருவதாக கூறியுள்ளார்கள். அவர்களது முடிவை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ கூறும்போது, ‘இந்த ஆலைதொடர்ந்து இயங்க வேண்டும். இவ்விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் முழு ஈடுபாடு காட்டாதது ஆச்சரியமாக உள்ளது. அவர்கள் தலையிட்டு ஆலையை இயங்கச்செய்தால் ஆயிரக்கணக்கான குடும்பங் களின் வாழ்வு மீண்டும் தழைக்கும்’ என்றார்.

Thursday 30 October 2014

30.10.2014 மதுரை தோழர்.பி.மோகன் நினைவுநாள்.

அருமைத் தோழர்களே ! 30.10.2014 மதுரை பாராளுமன்ற உறுப்பினர்  தோழர். பி.மோகன் அவர்களின் நினைவுநாள். மதுரை மக்களின் அனைவரது அன்பை பெற்றவர் என்று சொன்னால் அது மிகையாகாது. தோழர்.மோகன் என்று சொன்னால் எந்த அரசியல் கட்சிகளுக்கும், எந்த சாதி, மதம் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவராக மதுரையை வளம் வந்த பெருமைமிகு தோழர்.பி.மோகன் ஆவார்.  
மதுரை மண்ணின் மைந்தராக அனைவரயும் பெயர் சொல்லி அழைக்க கூடிய அளவில் மக்களோடு இரண்டற கலந்த தலைவன் தோழர்.மோகன் ஆகும்.நமது பகுதியில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களுக்கு ஆதரவளித்து, வாழ்த்திய அன்புத்தலைவர் அவர். எந்த பகுதி ஊழியர்கள், மக்கள் போராடினாலும் அங்கு ஓடோடி வந்து குரல் கொடுத்த தலைவன். மதுரை மக்களின் முன்னேற்றத்திற்காக, அரசு மருத்துவமனை முன்னேற்றம் போன்றவற்றில் தனிக்கவனம் செலுத்திய மக்கள் தலைவர்.செம்மொழிக்காக நாடாளுமன்றத்தில் ஓங்கி குரல் கொடுத்த உத்தமர் தோழர்.மோகன் ஆகும்.
பாராளுமன்ற ஒதிக்கீடு நிதிதனை மக்கள் நலத் திட்டங்களுக்காகவே முழுக்க முழுக்க முன் நின்று பணியாற்றிய பண்பாளர்.மாணவ பருவம் முதற் கொண்டு இறுதிவரை தான் கொண்ட மார்க்சிய கொள்கையில் உறுதியாக நின்ற உயர்ந்த மனிதர் தோழர்.மோகன்  2009 ஆம் ஆண்டு-அக்டோபர் 30   நம்மை விட்டுப் பிரிந்த அன்புத் தலைவன் தோழர். மோகன்  மறைந்து இன்றோடு  5 ஆண்டுகள் உருண் டோடி  விட்டது.உழைப்பாளி வர்க்கத்திற்காக தனது இந் நுயிரை ஈந்த அந்த தலைவனின் விட்டுச் சென்ற பணிகளை நாம் தொடர்ந்து போராடி வெல்வோம் என இந் நாளில் சபதம் ஏற்போம்.
--- என்றும் நினைவுடன் அன்புத் தோழன்.எஸ்.சூரியன்,D/S-BSNLEU.

அக்டோபர்-30, முத்து ராமலிங்க தேர்வர் பிறந்த/இறந்த நாள்.

முத்துராமலிங்கத் தேவரை இந்நாட்டுக்காக ஈன்றளித்த பெருமைக்குரியோர் உக்கிர பாண்டியத் தேவரும், இந்திராணி அம்மையாரும்.இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமமே இவர் அவதரித்த திருத்தலமாகும். 30.10.1908 இவர் பிறந்த பொன்னாளாகும். இவர் ஆறு மாதக் குழந்தையாய் இருந்தபோதே அன்னையை இழந்தார். சாந்தபீவி எனும் இஸ்லாமிய அம்மையாரே இவருக்குத் தாய்ப்போல் ஊட்டி வளர்த்தார். இவருக்குக் குருவாக அமைந்து கற்பித்தவரோ கிறித்துவப் பாதிரியார் ஒருவர். எனவே இவரது மத நல்லிணக்கத்திற்கு இதுவே வித்து எனலாம்..
தொடக்கத்தில் தம் இல்லத்திலும், பின்னர் கமுதி, பசுமலை, மதுரை, இராமநாதபுரம் முதலிய இடங்களிலும் கல்வி கற்றார். இவர் இளமை முதலே நாட்டு விடுதலையில் நாட்டம் கொண்டார். தம் பத்தொன்பதாம் அகவையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஸ்ரீமான் சீனிவாசக அய்யங்காரின் வழிகாட்டுதலால் அரசியலில் அடியெடுத்து வைத்தார். காங்கிரஸ் பேரியக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு விடுதலை வேள்வியில் தீவிரமாகப் பங்கேற்றார். காந்திஜி அறிவித்த கள்ளுக் கடை மறியலின் போது தமக்குச் சொந்தமான பனை மரங்களை வெட்டி வீழ்த்தினார்.ஒரு சமயம் இராமநாதபுரம் பகுதிக்கு மூதறிஞர் இராஜாஜி தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தந்த போது அவரை மாட்டு வண்டியில் அமர்த்தி இவரே சாரதியாகச் செயல்பட்டார். தீரர் சத்தியமூர்த்தியுடன் இணைந்து தமிழகமெங்குமுள்ள பட்டி தொட்டிகள் எல்லாம் சுற்றி அனல் பொறி பறக்கப் பிரச்சாரம் செய்தார். இவர் பெரு நிலக்கிழாராயினும் தம் நிலங்களை உழுபவர்களுக்கே உரிமையாக்கிய உத்தம சீலராவார். இவர் நாட்டு நலனில் நாட்டம் கொண்டதால் இறுதிவரை திருமணமே செய்து கொள்ளவில்லை.ஒரு சமயம் காமராஜர் விருதுநகர் நகராட்சித் தலைவரானதற்குத் தேவரின் தீவிரப் பிரச்சாரமே காரணமாகும். 1933 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டக் கழகத் தலைவர் பதவி தேவருக்குக் கிடைக்க வாய்ப்பிருந்தும் அதனைப் பெருந்தன்மையோடு தம் ஆத்ம நண்பரானபின்னாளில் சென்னை மாகாண முதல்வராகவும், ஒரிசா ஆளுநராகவும் பதவி வகித்தஇராஜபாளையம் பி.எஸ்.குமாரசாமி ராஜாவுக்கு விட்டுக் கொடுத்தார்.ஜமீன் ஒழிப்புப் போராட்டத்திலும், மதுரை மீனாட்சி ஆலைத் தொழிலாளர் போராட்டத்திலும், கைரேகை மறுப்புச் சட்டப் போராட்டத்திலும் தீவிரமாக ஈடுபட்டு அவற்றை வெற்றி பெறச் செய்தார். ஆங்கில அரசு அமுல்படுத்திய குற்றப் பரம்பரைச் சட்டத்தை நீக்கப் போராடி அதிலும் வெற்றி கண்டார். இவரது செயல்பாடுகளைக் கண்டு அஞ்சிய ஆங்கில அரசு இவரைப் பேசவிடாது வாய்ப்பூட்டுச் சட்டம் போட்டது. காங்கிரஸ் கட்சியில் இருந்த போதும், பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்த பின்னரும் பலமுறை சிறைவாசம் அனுபவித்தார்.1937 மார்ச் 11 ஆம் நாள் நடைபெற்ற திரிபுரா காங்கிரஸ் மாநாட்டுத் தலைவராக நேதாஜியைத் தேர்வு செய்ய தேவர் அரும்பாடு பட்டார். அது முதல் அவரோடு நெருங்கிய நட்புப் பூண்டு அவரது சீடராகவே மாறினார்.08.07.1937 ல் அன்றைய முதல்வர் ராஜாஜியும் விடுதலை வீரர் வைத்தியநாத ஐயரும் தாழ்த்தப்பட்டோரை மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் ஆலயப் பிரவேசம் செய்விக்க முயன்றனர். ஜாதி வெறியர்கள் அதனைக் கடுமையாக எதிர்த்தனர். தாழ்த்தப்பட்டோர் பலரைத் தம் இல்லத்தில் வைத்து ஆதரித்து வந்த பசும்பொன் தேவரின் ஒத்துழைப்பால் தான் அது வெற்றிகரமாக நிறைவேறியது.
நேதாஜியின் தொடர்புக்குப் பின்னர் காந்திஜியின் மிதவாதப் போக்கைக் காட்டிலும், நேதாஜியின் போர்க் கொள்கையே நம்நாட்டு விடுதலைக்கு உகந்தது என்ற முடிவுக்கு வந்தார். தேவரின் அழைப்பிற்கிணங்க 06.09.1939 அன்று நேதாஜி மதுரை வந்து தம் கொள்கையை மக்களிடையே பரப்பினார். நேதாஜி அமைத்த போர்க்குழுவில் தேவரும் இடம் பெற்றார்.1946 ஆம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஆந்திர கேசரி பிரகாசம் இவரைத் தொழிலமைச்சராகப் பதவி ஏற்குமாறு இருமுறை வற்புறுத்தியும் இவர் இணங்கினாரில்லை. இந்நிகழ்வுகளால் இவருக்குப் பதவி ஆசை அறவே இல்லை என்பது கண்கூடு.இவர் இப்புவியில் வாழ்ந்த காலம் 55 ஆண்டுகள்தாம். ஆனால் சிறையில் வாடியதோ 10 ஆண்டுகளுக்கு மேல். இவரது அருந்தொண்டினைக் காணப் பொறுக்காத காலன் 30.10.1963 அன்று இப்பூவுலகை விட்டே அபகரித்துச் சென்றான்.நாட்டு விடுதலைக்காகப் போராடியவராகவிளங்கினார் தேவர்.

தோழர் எம்.தங்கராஜ் நினைவஞ்சலி -சமூக நீதி கருத்தரங்கம்.

அருமைத் தோழர்களே! 2013-அக்டோபர்,29 ஓராண்டு காலம் உருண்டோடி விட்டது.  மதுரை மாவட்டத்தில்  நிலவிய  தீண்டாமைக்   கொடுமைகளை   எதிர்த்து அனைத்துப்  பகுதி மக்களையும் திரட்டி வலுவான இயக்கங்களை    நடத்திய   எம்.தங்கராஜ்தலித்மக்களுக்காக ஊராட்சித் தலைவர் பதவி   ஒதுக்கப்பட்ட பாப்பாபட்டி,  கீரிபட்டி,  நாட்டாமங்கலம்   ஆகிய   கிராமங்களில்   ஜனநாயக   ரீதியாக தேர்தல்   நடை பெறவும்,  தேர்வு   செய்யப்பட்ட   தலித்   தலைவர்கள் பதவியில்  தொடரவும்முக்கியப் பங்காற்றினார்.
இதனால் அவருக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் வந்த போதும் அவர் அஞ்சவில்லை.உத்தப்புரம் தீண்டா மைச் சுவரை அகற்றுவதில் முக்கியப் பங்காற்றிய எம்.தங்கராஜ்ஏழை விவசாயக்குடும்பத்தில் பிறந்தவராவார்விவசாய இயக்கத்தில் இருந்து 1980ஆம் ஆண்டுமுதல்  திறம்படசெயலாற்றினார்பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்து சிறைசென்ற எம்.தங்கராஜ்கிராமப்புறங்களில் நிலவிய சமூக ஒடுக்குமுறைக்கு எதிராகபோராடிய ஒரு     சிறந்த   போராளியாகத் திகழ்ந்தார்.
அடித்தட்டு மக்களுக்காக தனது இறுதி மூச்சு வரை அயராது ஓடி ஓடி உழைத்த ஓய்வறியா போராளி அருமைத் தோழன் தமிழக தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர்களில் ஒருவரான எம்.தங்கராஜ் விபத்தில் மறைந்த தினமான 29.10.2014 புதன் மாலை கருமாத்தூரில்  தோழர் எம்.தங்கராஜ் நினைவஞ்சலி -சமூக நீதி கருத்தரங்கம் தோழர்.தேவராஜ் தலைமையில் நடை பெற்றது. 

சமூகநீதி சிறப்பு  கருத்தரங்கில் தோழர்கள், செல்லகண்ணு, பொன்னுத்தாய், சாமுவேல் ராஜ்,சி .ராமகிருஷ்ணன், பா.விக்ரமன், மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் தோழர்.எம்.தங்கராஜ் நினைவஞ்சலியோடு சமூக நீதி கருத்துக் களையும் வழங்கினர்.
நமது BSNLஊழியர் சங்கம் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஒரு அங்கம் என்ற அடிப்படையில் நமது சங்கத்தின் சார்பாக மதுரை மாவட்டச் செயலர் தோழர்.எஸ்.சூரியன், மற்றும் முன்னாள் மாவட்டத்தலைவர் தோழர். எம்.சௌந்தரும் கலந்து கொண்டனர்.