Tuesday 30 August 2016

செப்-2, வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்...


செப்-2, வேலைநிறுத்த பிரச்சார பயணம் ...29-08-16.

அருமைத் தோழர்களே ! நமது மதுரை மாவட்ட சங்கத்தின் ...செப்-2, வேலைநிறுத்த பிரச்சார பயணத்தின் தொடர்ச்சியாக 29-08-16 ஆண்டிபட்டியில் துவங்கி, பெரியகுளம், தேனி , சின்னமனூர், உத்தமபாளையம் இறுதியில் போடியில் பிரச்சார கூட்டம் நிறைவுற்றது. தேனி மாவட்டத்தின் அனைத்து ஊழியர்களையும் சந்தித்து செப்-2, வேலை நிறுத்தத்திற்க்கான பிரச்சார பயணம் என்பது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது....
இப்பிரச்ச்சார பயணத்தில் மாவட்டத்தலைவர் தோழர்.எ. பிச்சைக்கண்ணு தலைமையில் மாவட்ட சங்க நிர்வாகிகள், தோழர்கள்,எஸ். மானுவேல் பால்ராஜ், கே.என். செல்வன், எ. நெடுஞ்செழியன், பி. தேசிங்கு, விஜயகுமார், டி.கே.சீனிவாசன் மற்றும் மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள் எஸ். ஜான் போர்ஜியா, பி. சந்திர சேகர் ஆகியோர் செப்-2, வேலைநிறுத்தத்தில் நமது BSNL ஊழியர்கள் பங்கெடுக்க வேண்டிய அவசியம் குறித்து அனைத்து ஊர்களிலும் சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள். சென்ற இடமெல்லாம் அனைத்து ஊழியர்களும் செப்-2, வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிட சூளுரை ஏற்றார்கள்.

ஆகஸ்ட்-30, N.S.கிருஷ்ணன் நினைவு நாள் ...

சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கு 

சொந்தமானது சிரிப்பு...
இது... கலைவாணர் சிரிப்பைப் பற்றி எழுதிய பாடல்...
அவரது நகைச்சுவை மக்களை 
சிரிக்க வைத்தது... சிந்திக்க வைத்தது... 
சிரித்து சிவந்தது மக்கள் முகம்...
கொடுத்துச் சிவந்தது அவரது கரம்...
பணத்துக்கும்...பதவிக்கும் ஆலாய்ப் பறக்கும் காலமிது...
தனது சிரிப்பும் சிந்தனையும் இறுதியாக...
அடங்கும் வேளையிலும்..
எளியவருக்கு கொடுத்து உதவிய NSK நினைவைப் போற்றுவோம்..

செப்.2: களம் காணும் BSNL ஊழியர்கள்.


இந்திய நாட்டின் தொலைத் தொடர்பு சேவைகளை அரசுத் துறையில் மட்டுமே வழங்கி வந்த சூழலில், இந்திய அரசாங்கம் ஏற்றுக் கொண்ட உலகமயக் கொள்கைகளின் காரணமாக தனியார் நிறுவனங்களும் தொலைத் தொடர்பு சேவைக்குள் நுழைந்தன.‘சமதளப் போட்டிஎன்று வாயளவில் கூறினாலும், தனியார்களுக்கு அப்போதிருந்தே பல்வேறு சலுகைகளை ஆட்சியாளர்கள் செய்து வந்தனர். தனியார் நிறுவனங்கள் மொபைல் சேவை வழங்கத் துவங்கி ஐந்தாண்டுகள் கழிந்த பின்னரே பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல்க்கு 2002ஆம் ஆண்டுதான்சேவை வழங்க அனுமதிக்கப்பட்டது.ஆனாலும்மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையின் காரணமாக பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் வெகு வேகமாக வளர்ந்து வந்தது.பிஎஸ்என்எல் நிறுவனம் வரும் வரை நாம்அழைக்கும் அழைப்புகளுக்கான கட்டணம் நிமிடத்திற்கு 16 ரூபாய் வரையிலும், நம்மைஅழைப்பவர்களிடம் பேசினால் அதற்கு நிமிடத்திற்கு 8 ரூபாய் வரையிலும் கட்டணம் கட்ட வேண்டியிருந்தது.ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனம் சேவை தர ஆரம்பித்த போதே நம்மை அழைப்பவர்களிடம் பேசுவதற்கான கட்டணம் ஏதும் இல்லை என்று அறிவித்தது. தனியார் நிறுவனங்களும் அந்தக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டியதாயிற்று. அதற்குமுந்தைய ஐந்து ஆண்டுகளில் இந்தக் கட்டணத்தில் மட்டும் இந்திய நாட்டு மொபைல் வாடிக்கையாளர்களிடம் இருந்து தனியார் கம்பெனிகள் எவ்வளவு கொள்ளையடித் திருப்பார்கள்? அதுமட்டுமல்ல.கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏர்டெல், ரிலையன்ஸ், வோடோபோன், ஐடியா உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் தங்கள் வருமானத்தில் 46,000 கோடிரூபாய்களை குறைத்துக்காட்டி அரசாங்கத்திற்கு தரவேண்டிய லைசென்ஸ் கட்டணத்தில் 12,600 கோடி ரூபாய்களை ஏமாற்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
BSNL நிறுவனத்துக்கு தடை...
இந்திய மக்களின் ஆதரவோடு வேகமாக வளர்ந்து வந்த பிஎஸ்என்எல் நிறுவனம்குறைந்த கட்டணத்தில் சேவை கொடுத்த போதும் வருடத்திற்கு 10,000 கோடி வரை லாபத்தை சம்பாதித்தது. பிஎஸ்என்எல்-ன் வளர்ச்சிதனியார் கம்பெனிகளின் கொள்ளை லாபத்தைதடுத்த காரணத்தால் அரசாங்கம் அதனை தடை செய்ய முயற்சித்தது. தொலைத் தொடர்பு சந்தை பெருமளவில் விரிவடைந்து வந்தசூழ்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் தனது விஸ்தரிப்பிற்காக 4.5 கோடி தொலைபேசி இணைப்புகளுக்கான டெண்டரை முடிக்க இருந்த சமயத்தில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த .ராசாஅந்த டெண்டரை ரத்து செய்தார்.அந்தடெண்டர் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ஊழியர்களும் அதிகாரிகளும் இணைந்து11.07.2007ல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்த போதும், கருவிகள் முழுமையாக கிடைக்கவில்லை. அதற்கு பின்னர் அறிவிக்கப்பட்ட 10 கோடி தொலைபேசி இணைப்புகளுக்கான டெண்டரும் ஆட்சியாளர்களால் ரத்து செய்யப்பட்டது. சந்தை விரிவடைந்துவந்த காலத்தில் இப்படி தொடர்ச்சியாக பிஎஸ்என்எல்-ன் வளர்ச்சியை ஆட்சியாளர்கள் முடக்கி, இந்திய தொலைத்தொடர்பு சந்தையின் பெரும் பகுதியை தனியார் கம்பெனிகள் கைவசப்படுத்த பேருதவி செய்தனர்.
பிஎஸ்என்எல்-ன் புத்தாக்கம் சங்கங்களின் புதிய முயற்சிகள்
இதன் காரணமாக 2009ஆம் ஆண்டு முதல் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் சேவை விஸ்தரிக்கத் தொடங்கியது. மக்களின் சொத்தான இந்த பொதுத்துறை நிறுவனத்தைப் பாதுகாக்க ஆட்சியாளர்கள் தடை செய்த போதும் பிஎஸ்என்எல்ஐ புத்தாக்கம் செய்ய அந்நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்து பல முனைகளில் போராடியது. ஆட்சியாளர்களின் கொள்கையை எதிர்த்தபோராட்டங்கள், செயல் திறனற்ற நிர்வாகத்தினை செயல்பட வைப்பதற்கான போராட்டங்களுடன், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின்வேலைக் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான இயக்கங்கள் என தொடர்ந்து செயல்பட்டது.இந்தக் கூட்டமைப்பு வாடிக்கையாளர் மகிழ்விப்பு வாரம், மாதம் மற்றும் வருடம் என்ற பெயரில் சேவையினை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டது.இதன் தொடர்ச்சியான முயற்சிகளின் காரணமாக நிர்வாகமும்இரவு நேர இலவச அழைப்புகள்என்ற பெயரில்லேண்ட்லைன் தொலைபேசிகளில் இருந்து இரவு 9 மணிமுதல் காலை 7 மணி வரை அழைக்கும், அழைப்புகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை என்ற பொதுமக்கள் பயன் பெறும் நல்லதொரு திட்டத்தினை அறிவித்தது. அதேநேரத்தில் மாநிலங்களை விட்டுவெளியே செல்லும்போது மொபைல் தொலைபேசிகளுக்கு வரும் அழைப்புகளுக்கான கட்டணங்களையும் ரத்து செய்து இலவசம்என பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்தது. கடந்த ஜனவரி மாதம் முதல்புன்முறுவலுடன் சேவைஎன்ற பெயரில் ஊழியர்களும் அதிகாரிகளும் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறுவதற்கான இயக்கங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
நிர்வாகத்தின் புதிய திட்டங்களாலும், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் கடினமான உழைப்பின் காரணமாகவும் இந்நிறுவனத்தின் வருவாய் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதன் காரணமாக 2013-14 ஆம் ஆண்டில் 691கோடி ரூபாய்செயல்பாட்டு நஷ்டத்தை சந்தித்த பிஎஸ்என்எல்2014-15ஆம் ஆண்டில் செயல்பாட்டு லாபமாக 672 கோடி ரூபாய்களை சம்பாதித்தது. இந்தசெயல்பாட்டு லாபம் 2015-16ல் 2,400 கோடி ரூபாய்களுக்கு மேல் இருக்கும் என நிர்வாகம் கூறுகிறது.கடந்த டிசம்பர் மாதம் சென்னை பெரு வெள்ளத்தின்போது தனியார் நிறுவனங்கள் எல்லாம் தனது சேவையை மூடிவிட்டு ஓடிச்சென்ற போதும், மக்களின் சொத்தான இந்தபிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும் மக்களுக்காக அதிகப்படியான செலவுகளை செய்துசேவையை கொடுத்ததோடு ஒரு வார காலம் இலவசமாக அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் இணையதளவசதி ஆகியவற்றை கொடுத்து இடர்பாடுகளின் போது மக்களின் உற்ற நண்பனாக செயல்பட்டது.இயற்கைஇடர்பாட்டில் சிக்கிய மக்களுக்கு தொலைத்தொடர்பு சேவையை கொடுத்துக் கொண்டே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள உணவு, கம்பளி ஆடைகள் உள்ளிட்டவைகளை பிஎஸ்என்எல் ஊழியர்கள் வழங்கினார்கள். குப்பையாக கிடந்த சென்னையை சுத்தப்படுத்தவும் அதன் ஊழியர்கள் பணியாற்றினார்கள். தொடர்ச்சியாக நஷ்டத்தை சந்தித்து வரும்இந்த மாபெரும் பொதுத்துறை நிறுவனத்தின் மீட்சிக்காக இதுவரை இருந்து வந்த /வரும் ஆட்சியாளர்கள் யாரும் எந்த ஒருபொருளாதார உதவியும் செய்யாத நிலையிலும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் முயற்சியால் இந்நிறுவனம் தற்போது லாபத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.தமிழகத்தில் 26.07.2016 அன்றுநலந்தானாஎன்ற திட்டத்தின் அடிப்படையில் ஊழியர்களும் அதிகாரிகளும் மேளாக்களை நடத்திய போது தமிழகத்தில் ஒரே நாளில் 37,000க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் விற்பனை செய்யப்பட்டன. ஊழியர்கள் அதிகாரிகளின் கூட்டமைப்பானபோரம்’ 10.08.2016 அன்று மக்கள்மத்தியில் பிஎஸ்என்எல்ன் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தும் நோக்கோடு அனைத்து மாவட்ட தலைநகர்களின் பேரணியை நடத்தி அன்றைய தினமே மெகா மேளாக்களை நடத்தினார்கள். அன்றைய தினம் மட்டும் 68,000க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் தமிழகத்தில் விற்கப்பட்டது. நாடு முழுவதும் கடந்தவருடத்தில் இருந்து புதிய இணைப்புகளை கொடுப்பதில் பிஎஸ்என்எல் நிறுவனமே முதல் இடத்தில் தொடர்ந்து உள்ளது.
வெந்நீர் ஊற்றும் மத்தியஅரசாங்கம்
இவ்வாறாக இந்திய நாட்டு மக்களின் ஆதரவோடும், பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் கடுமையான உழைப்பின் காரணமாகவும் முன்னேறி வருவதைக்கண்ட ஆட்சியாளர்கள் இந்நிறுவனத்தை தனியாருக்கு தாரை வார்க்க முயல்கிறார்கள். சுதந்திர இந்தியாவில் நாட்டில் உள்ள வளங்களை, அனைத்து பகுதி மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கோடு உருவாக்கப்பட்ட திட்டக் கமிஷனை தற்போதைய ஆட்சியாளர்கள் கலைத்து நிதி ஆயோக்என்ற அமைப்பினை உருவாக்கி உள்ளனர். அந்தநிறுவனம் தற்போது பிஎஸ்என்எல் ஐகேந்திர பங்கு விற்பனை என்ற பெயரில்தனியார்களுக்கு நேரடியாக தாரை வார்க்கும்ஆலோசனைகளை முன்மொழிந்து உள்ளது. இதனை எதிர்த்து ஊழியர்களும், அதிகாரிகளும் கடுமையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.‘பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் செயல்படாத தன்மை காரணமாக பொதுத்துறை நிறுவனங்கள் நலிவடைகிறது. எனவே தனியார்மயமாக்குகின்றோம்என்று ஆட்சியாளர்கள் சொல்லி வந்தார்கள். அவர்களின் சதித்திட்டங்களை எல்லாம் தகர்த்தெறிந்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் கடுமையான உழைப்பின் காரணமாக மீண்டு வரும்பிஎஸ்என்எல் நிறுவனத்தையும் தனியார்மயமாக்க ஆட்சியாளர்கள் நினைக்கின்றார்கள் எனில் அவர்கள் கடைப்பிடிக்கும் கொள்கைகள் கார்ப்பரேட் முதலாளிகளுக்கான கொள்கைகள் தானே தவிர இந்திய நாட்டு மக்களுக்கான கொள்கைகள் அல்ல என்பதை நிரூபணம் செய்கிறது.எனவே தான் விலைவாசியை கட்டுப்படுத்து, வேலைவாய்ப்பைஉருவாக்கு, தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சகூலியாக மத்திய அரசின் ஊதியக் குழு பரிந்துரைத்த 18,000 ரூபாயை வழங்கிடு, பிஎஸ்என்எல் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்காதே என்பது உள்ளிட்ட 12 அம்சக்கோரிக்கைகளோடு செப்டம்பர் 2ல் போராட்ட களம் காணும் இந்திய நாட்டு உழைப்பாளி மக்களுடன் இணைந்து போராடுவது என பிஎஸ்என்எல் ஊழியர் சங்கமும் இன்னபிற சங்கங்களும் முடிவெடுத்துள்ளனர். மீண்டுமொரு சுதந்திர போராய் நடக்கும் செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தில் அனைத்து பிஎஸ்என்எல் ஊழியர்களும் பங்கெடுத்து இந்த போராட்டத்தை வெற்றிகரமாக்குவது உறுதி. -
 A. பாபு ராதாகிருஷ்ணன்...தமிழ் மாநில செயலர், BSNLஊழியர் சங்கம்.

Monday 29 August 2016

30.08.16மதுரை GM(O)-TRCயில் பணிநிறைவு பாராட்டு விழா.

அருமைத் தோழர்களே ! 30.08.16 அன்று மதுரை GM(O)-TRCயில்  ஆகஸ்ட் மாதத்திற்கான 126வது  பணிநிறைவு பாராட்டு விழா காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. 


தோழர்கள் பணி நிறைவு காலத்தில் எல்லா வளமும், எல்லா நலமும் பெற்று குடும்பத்தாருடன் பல்லாண்டு வாழ்க என நாம் உளமார வாழத்துகிறோம்.

மகத்தான கலைஞனுக்கு கண்ணீர் அஞ்சலி.

மக்கள் இசைப் பாடகரும் தமுஎகச திருநெல்வேலி மாவட்டச் செயலாளருமான, அன்புத் தோழன் நெல்லை திருவுடையான் சேலத்திலிருந்து ஊர் திரும்பும் வழியில், வாடிப்பட்டி அருகில் விபத்தில் மரணம். திருவுடையான் உடல் மதுரை - வாடிப்பட்டி அரசு மருத்துவ மனையில் உள்ளது. (அவரது தம்பி தண்டபாணி மதுரை மீனாட்சி மிஷனில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.)



Saturday 27 August 2016

27-08-16 செப்-2, வேலைநிறுத்த விளக்க கூட்டம்...

அருமைத் தோழர்களே !  நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் சார்பாக 27-08-16 அன்று மதுரை GM அலுவலகத்தில் மதியம் 1மணிக்கு  செப்-2, வேலைநிறுத்த விளக்க கூட்டம்...மாவட்ட தலைவர் தோழர்.A. பிச்சைக்கண்ணு அவர்கள் தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. . . .
மாவட்டச் செயலர் தோழர்.C. செல்வின் சத்யராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். அதன்பின் நமது சிறப்பு அழைப்பாளர் இன்சூரன்ஸ் ஊழியர்சங்கம் AIIEA நிர்வாகி தோழர். N. சுரேஷ் குமார் செப்-2, போராட்டத்தின் அவசியம் குறித்து மிகவும், சிறப்பானதொரு விளக்க வுரையை நிகழ்த்தினார்....
தொடர்ந்து தோழர்கள், ஜான் போர்ஜியா, சூரியன், சோணைமுத்து ஆகியோரும் செப்-2, போராட்டம் குறித்து உரைநிகழ்த்தினார்கள். தோழர். சந்திர சேகர் நன்றியுரை நிகழ்த்தி னார். 60 பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.

செப்.2:தொழிலாளர்உரிமைப்போர் . . .

நாட்டிலுள்ள உழைக்கும் வர்க்கம் வரும் செப்டம்பர் 2 அன்று பொது வேலை நிறுத்தத்தை மேற்கொள்ள தயாரிப்புப்பணிகளைச் செய்து கொண்டிருக்கிறது. இது, 1991ல் தாராளமயக் கொள்கைகளை ஆட்சியாளர்கள் கடைப்பிடிக்கத் துவங்கியபின் நடைபெறும் 17ஆவது பொது வேலைநிறுத்தமாகும். தாராளமயத்தை அமல்ப டுத்தத்  துவங்கிய கடந்த 25 ஆண்டுகளில், இந்த 17 வேலைநிறுத்தங்களும் தொழிலாளி வர்க்கத்தால் நவீன தாராளமயத் தாக்குதலுக்கு எதிராக மேற்கொ ள்ளப்பட்ட மிகப்பெரிய அளவிலான எதிர்ப்பு நடவடிக்கைகளாகும். உழைக்கும் மக்களைக் கடுமையாகப் பாதிக்கக் கூடிய அனைத்து முக்கியப் பிரச்சனைகளையும் உள்ளடக்கி ஒரு 12 அம்சக் கோரிக்கைச் சாசனம் உருவாக்கப்பட்டு அதன்கீழ் இவ்வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டிருக்கிறது.இவற்றில் விலைவாசியைக் கட்டுப்படுத்து, பொது வினியோக முறையை வலுப்படுத்து, தொழிலாளர் நலச் சட்டங்களை தொழிலாளர் விரோத சட்டங்களாக மாற்றாதே, தனியார்மயத்தை நிறுத்து, பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்காதே, ஒப்பந்த வேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திடு, மாதத்திற்கு 18 ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச ஊதியம்வழங்கிடு, அணிதிரட்டப்படாத முறைசாராஊழியர் உட்பட அனைத்துத் தொழிலாளர்களுக்கும் 3 ஆயிரம் ரூபாய் உத்தரவாதப்படுத்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கிடு உள்ளிட்ட கோரிக்கைகளும் அடங்கும்.
ஒருமுறை கூட பேசாத அரசு
சரியாக ஓராண்டுக்கு முன்பு 2015ல் இதே செப்டம்பர் 2 அன்று மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் சுயேட்சையான மத்திய, மாநில அரசு ஊழியர் சம்மேளனங்கள் இணைந்து ஒரு வேலை நிறுத்தத்தை நடத்தின. ஆனால், மோடி அரசாங்கம்,தொழிற்சங்கங்கள் முன்வைத்த கோரிக்கை எதையும் நிறைவேற்றத் தவறிவிட்டது. அப்போது வேலைநிறுத்தத்திற்கு முன்பு, தொழிற்சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக அமைக்கப்பட்ட அமைச்சரகக் குழு அதன்பின்னர் இந்த சங்கங்களுடன் ஒரு முறை கூட பேச்சுவார்த்தை நடத்திடவில்லை. மாறாக, மோடி அரசாங்கம், தன்னுடைய தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
அதுமட்டுமல்ல, சில முக்கியமான பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாரிடம் தாரை வார்ப்பதற்கும் முன்மொழிவுகளை மோடி அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது. தொழிலாளர் நலச் சட்டங்களைத் தொழிலாளர் விரோத சட்டங்களாக மாற்றுவதற்கான வரைவுகளும் தயாராகிக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே சில பாஜக மாநில அரசாங்கங்கள், தொழிலாளர்களின் உரிமைகளைக் கடுமையாகப் பாதிக்கக்கூடிய விதத்தில், மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றன.
வெற்றுத் தம்பட்டத்தால் பலன் இல்லை
தொடர்ந்து விஷம்போல் ஏறிவரும் விலைவாசி உயர்வும், உணவுப் பணவீக்கமும் உண்மையான ஊதியங்களை அரித்துக் கொண்டிருக்கின்றன. உணவுப் பணவீக்கம் ஜூலை மாதத்தில் 11.82 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. இதே மாதத்தில் நுகர்வோர் விலைவாசிக் குறியீட்டெண்ணும் 6.07 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இது கடந்த 23 மாதங்களில் அதிகபட்ச உயர்வாகும். ‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்என்று இவர்கள் அடித்த தம்பட்டத்தின் மூலம் புதிய வேலைகள் எதையும் எந்தவிதமான தொழிற்சாலைகளிலும் இவர்களால் உருவாக்க முடியவில்லை.வேலைநிறுத்தத்திற்கான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டிருக்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிராகத் தொழிலாளர்களின் கோபம் உக்கிரமடைந்திருப்பதையும், தங்கள் உரிமைகளுக்காக ஒன்றுபட்டுப் போராட அவர்கள் உறுதியுடன் இருப்பதையும் பார்க்க முடிகிறது. இவ்வாறு தொழிலாளர்களின் மத்தியில் உருக்குபோன்று ஒற்றுமை வளர்ந்து வரும் பின்னணியில், ஆர்எஸ்எஸ்-இன் கட்டளைக்கிணங்க பாரதீய மஸ்தூர் சங்கம் வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ளாது என்று அறிவித்துள்ள போதிலும், அதன்கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களும் ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதை அதனால் தடுத்திட முடியாது.மக்களை மதத்தின் அடிப்படையில் பிரித்திட மதவெறி சக்திகள் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு தொழிலாளர்களின் ஒன்றுபட்ட வேலைநிறுத்தம் மரண அடி கொடுப்பது போல அமைந்திடும். நவீன தாராளமயக் கொள்கைகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள இதர பகுதி உழைப்பாளி மக்களிடமிருந்தும் போராட்டத்தில் ஈடுபடவுள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் ஊழியர் அமைப்புகளின் தொழிலாளர்கள் ஆதரவினைப் பெற்றிருக்கிறார்கள். வேலைநிறுத்தத்திற்கு பல்வேறு விவசாய மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் ஆதரவினைப் பிரகடனம் செய்திருக்கின்றன.
தங்கள் தார்மீக மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் அவர்கள் மேற்கொள்ள இருக்கின்றனர். கல்வி நிறுவனங்களில் அன்றைய தினம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக மாணவர் அமைப்புகளும் அறைகூவல் விடுத்திருக்கின்றன .செப்டம்பர் 2, உழைக்கும் மக்களின் பெரும் திரளான போராட்டத்தை முன்னறிவிக்கும் விதத்திலும், உரிமைகளை உறுதிப்படுத்தும் விதத்திலும், மாற்றுக் கொள்கைகளைக் கோரும் விதத்திலும் மாறும்.