Tuesday 10 February 2015

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு: மாறன் கோரிக்கை -நிராகரித்தது.

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் CPI சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுக அனுமதி கோரி மாறன் சகோதரர்கள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணைக்காக அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம், ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் தங்களுக்கு சம்மன் அளித்துள் ளதை எதிர்த்து கலாநிதி மாறன் மற்றும் மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.அந்த மனுவில், 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக மட்டுமே சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு ஸ்பெக்ட்ரம் முறைகேட்டுடன் தொடர்புடையதல்ல. எனவே, இவ்வழக்கில் தங்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது சிறப்பு நீதிமன்றத்தின் அதிகார வரம்பு குறித்து கேள்வியெழுப்பும் வகையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.கடந்த 7-ம் தேதி மனு விசார ணைக்கு ஏற்கப்பட்டது. தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான அமர்வு முன்பு வரும் 9-ம் தேதி மனு விசார ணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் தரப்பில், ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் தங்களுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுப்பியுள்ள சம்மனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய அனுமதி கோரப்பட்டது.இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், இவ்விவகாரத்தில் சம்மன் அனுப்பிய சிறப்பு நீதிமன்றத்தை மட்டுமே மனுதாரர்கள் அணுக முடியும் என்றனர்.மேலும், 'ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு ஸ்பெக்ட்ரம் முறைகேட்டுடன் தொடர்புடையதல்ல' என மனுதாரர்கள் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் முன் வைத்த வாதத்தை மேற்கோள் காட்டியே சிறப்பு நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் யோசனை தெரிவித்தனர்.வழக்கின் பின்னணி: ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளரான சிவசங்கரனை கட்டாயப்படுத்தி அவரின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அனந்த கிருஷ்ணனுக்கு விற்கச் செய்ததாகவும், அதற்குப் பலனாக, மேக்சிஸ் நிறுவனத்திடமிருந்து வேறொரு நிறுவனம் வழியாக சன் டைரக்ட் டிவி நிறுவனத்துக்கு முதலீடு என்ற வகையில் ஆதாயம் அடைந்ததாகவும் தயாநிதி மாறன் மீது சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது இவ்வழக்கில், தயாநிதி, கலாநிதி மற்றும் இதர 6 பேர் வரும் மார்ச் 2-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என சிறப்பு நீதிமன்ற நீதிபதி .பி. சைனி, கடந்த அக்டோபர் மாதம் சம்மன் அனுப்பி உத்தரவிட்டிருந்தார்.

No comments: