Tuesday 24 February 2015

இடதுசாரி சிந்தனையாளர் பன்சாரே கொலைக்கு தமுஎகச கண்டனம்.

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் இடதுசாரி சிந்தனையாளரும் மதவெறிக்கு எதிராக மக்களை அணி திரட்டியவருமான கோவிந்த் பன்சாரே (வயது 82) படுகொலை செய்யப்பட்டிருப்பதற்கு தமுஎகச கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் மாநிலத் தலைவர் .தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:வீரசிவாஜியின் பேரால் நடத்தப்படும் மதவாத அரசியலுக்கு எதிராகக் கொதித்தெழுந்து வரலாற்றில் சிவாஜியின் இன்னொரு பக்கத்தை மக்களிடம் பரப்புரை செய்தவர் -மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேக்கு சிலைவைப்போம் என்று பேசிய இந்து மதவெறி அமைப்புக்கு எதிராகக் குரல் கொடுத்தவர் பன்சாரே.இத்தகைய மகத்தான அடையாளத்தை அழித்துவிட வேண்டும் என்று வலதுசாரிக் கொலைவெறியர்கள் அவரது தியாக வாழ்க்கையைப் பறித்துள்ளனர்.கோலாப்பூர் சிவாஜி பல்கலைக்கழகத்தில் ஆர்எஸ்எஸ்சின் மாணவர் அமைப்பான ஏபிவிபியைச் சேர்ந்தவர் பன்சாரேயை நேர்நின்று மிரட்டல் விடுத்தபின்னும் அவருக்கு பாஜகதலைமையிலான மகாராஷ்டிரா அரசு பாதுகாப்பு அளிக்கத்தவறியதும் கண்டனத்துக்குரியது.ஏற்கெனவே மூடநம்பிக்கைகளுக்கு எதிராக நின்று மக்களை அறிவியல் பக்கம் திருப்பிய நரேந்திர தபோல்கர் புனேயில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் சுட்டுக் கொல்லப்பட்டார்.இந்தச் சம்பவங்கள் மதச்சார்பற்ற இடதுசாரி ஜனநாயக சக்திகளின் குரல் எழாமல் அழித்தொழிக்கும் பாசிசப் போக்கையே வெளிப்படுத்துகின்றன.இப்படிப்பட்ட சக்திகளை அடையாளம் கண்டு மக்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்று தமுஎகச அழைப்பு விடுக்கிறது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments: