Saturday 27 February 2016

ரூ.5.66 கோடி பற்றாக்குறையுடன் மதுரை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் வளர்ச்சித் திட்டங்கள் இல்லை: சிபிஎம் கவுன்சிலர் மா.செல்லம் குற்றச்சாட்டு

மதுரை மாநகராட்சி 2016-17ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தில் ரூ.5.66 கோடி நிதி பற்றாக்குறையுடன் நிறைவேற்றப்பட்டது.மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் வெள்ளியன்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் ராஜன்செல்லப்பா தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் சந்தீப் நந்தூரி முன்னிலை வகித்தார்.பட்ஜெட்டை மேயர் தாக்கல் செய்தார். அப்போது 2016 -17 நிதி ஆண்டில் மொத்த வரவு ரூ.791.13 கோடி என்றும், மொத்த செலவீனம் ரூ.796.79 கோடியாக உள்ளதாகவும், நிதி பற்றாக்குறையாக ரூ.5.66 கோடியாக உள்ளதாகவும் தெரிவித்தார். கூட்டத்தில் பட்ஜெட் மீதான கவுன்சிலர்கள் விவாதம் மற்றும் கருத்துக்கள் கேட்கப்பட்டன. இந்த பட்ஜெட் கூட்டத்தை திமுக கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.மா.செல்லம்இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் மா.செல்லம் பேசியதாவது: நிதிநிலை அறிக்கையை இரண்டுநாட்களுக்கு முன்பே மாமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும். ஆனால் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளில்தான் வழங்கப்பட்டுள்ளது. கோரிப்பாளையம், காளவாசல் மேம்பாலப் பணிக்கான நிதிஒதுக்கீடு குறித்து நிதிநிலை அறிக்கையில் கூறப்படவில்லை. ஓபுளா தரைப்பாலத்தை மேம்படுத்த வேண்டும். தெற்குவாசல் மேம்பாலத்தில் போக்குவரத்து நெருக்கடி அதிகமுள்ளது. ஆகையால் மேம்பாலத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தோம். அதற்கான ஏற்பாடுகள் இருந்தும், விரிவாக்கத்திற்கான பணிகள் துவங்கப்படவில்லை. மகப்பேறு அறுவை சிகிச்சைக்காக பெண்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்கின்றனர். மேற்கு மண்டலத்தில் மகப்பேறு மருத்துவமனை உள்ளது. அதில் மகப்பேறு அறுவை சிகிச்சைக்கான வசதியை மாநகராட்சி செய்துதர வேண்டும். வைகை 3-வது குடிநீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். மாநகராட்சியில் ரூ.6 கோடிக்கு நிதி பற்றாக்குறை உள்ளது. பொட்டல் வரியை வசூல்செய்வதன் மூலமும் 1400-க்கும் மேற்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான மண்டபம், கடைகளில் வாடகையை முறையாக வசூலிப்பதன் மூலமும் பற்றாக்குறை சரிசெய்ய முடியும். இந்த பட்ஜெட்டில் மதுரை மாநகரம் வளர்ச்சிக்கான திட்டங்கள் இல்லை என்றார்.

2 comments:

Unknown said...

நான் எனது அன்னை நிலத்திற்கு பொட்டல் வரி செலுத்த மேற்கு மண்டலம் மதுரை சென்றேன் .. 9000 ரூபாய் வரி செலுத்த 2200 ல லஞ்சம் கேட்டனர் ... வரி செலுத்த விருப்பம் இன்றி திரும்பினேன்...

Unknown said...

நான் எனது அன்னை நிலத்திற்கு பொட்டல் வரி செலுத்த மேற்கு மண்டலம் மதுரை சென்றேன் .. 9000 ரூபாய் வரி செலுத்த 2200 ல லஞ்சம் கேட்டனர் ... வரி செலுத்த விருப்பம் இன்றி திரும்பினேன்...