Tuesday 22 April 2014

ஏப்ரல் - 22 லெனின் பிறந்த நாள் (1870 ) . . .

1920 ஏப்ரல் மாதம் 22ல் மாஸ்கோ நகரத்தில் ஒரு தலைவர், தனக்கு பிறந்த நாள் கொண்டாடுவது கூடாது என்று உத்தரவிட்டார். அதையும் மீறி ஆயிரமாயிரம் தொழிலாளர்கள் தலைவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூட்டம் நடத்தினர். உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கி அக்கூட்டத்தில்சில மனிதர்களைப் பற்றி பேசுவது எளிதன்று. அவர்களுடைய சிறப்புகளையும் குறிப்பிடுவது இயலாது. நான் சொல்லோவியம் தீட்டுவதில் வல்லவன் என்றாலும் அவருடைய உருவத்தை உங்கள் முன் சித்தரிக்க சரியான சொற்கள் கிடைக்காமல் தவிக்கிறேன்என்றார்.
1893ல் குடியானவர்களின் வாழ்க்கையில் புதிய மறு மலர்ச்சி என்ற முதல் கட்டுரையையும் வெளியிட்டார் லெனின். அப்போது அவருக்கு வயது 23தான்.ஒரு சமயம் தன்னை சந்திக்க வந்த மனைவி (குரூப்ஸ்கயா)யிடம் ரகசிய செய்தியை சொல்ல வேண்டும். எப்படி சொல்வது என்று சிந்தித்தார். மனைவியிடம் உரையாடினார் கீழ்க்கண்டவாறுஎனக்கு கொடுத்த நூல்களை கொடுத்துவிட்டேன். தங்கை மரியாவின் நூலையும், அறை எண் தெரியுமா?’ என கேட்டவுடன் குரூப்ஸ்கயா, 193 என்றார். ஆனாலும் சம்பந்தமில்லாமல் பேசுவது அப்போது புரியவில்லை. ஏதோ மர்மம் இருக்கிறது என உணர்ந்த குரூப்ஸ்கயா, தங்கை மரியாவிடம் உள்ள நூல் பக்கம் 193 புரட்டினார். அதில் தொழிலாளர்களுக்கு விநியோகிக்க வேண்டிய ரகசிய சுற்றறிக்கை செய்தி இருந்தது. இப்படியாக எதிரிவர்க்கத்தினை ஏமாற்றி, தனது வர்க்கத்தினை தன் தந்திரத்தால் வழி நடத்தியது என இது போன்ற பல உதாரணங்கள்.
புரட்சி வெற்றி பெற்ற நேரத்தில் லெனின் அறைக்கு இரு தொழிலாளர்கள் அவரை சந்திக்க வந்தனர். லெனினின் செயலாளர் அவர்களை அழைத்துச் சென்றார். அமைச்சரவை தலைவரான லெனினின் சாதாரண அறையை பார்த்து வியந்தனர். தன்னைப் பார்க்க வந்தவர்களை சந்திக்க வந்த லெனின், அவருடைய அதிகாரப்பூர்வ இருக்கையில் அமராமல் நேரடியாக தொழிலாளர்களின் பக்கத்தில் வந்தமர்ந்து, என்ன விசயம் என கேட்டார். சந்திக்க வந்தவர்கள் லெனினின் அடக்கத்தை பணிவை கண்டு வியந்தனர். தாங்கள் சொல்ல வந்த விஷயத்தை சொல்லத் தயங்கினர். இருந்த போதும் என்ன விசயம் என கேட்டார். தொழிலாளர்கள், நாங்கள் தொழிற் சாலைகளில் பணிபுரியவே அனுபவம் மிக்கவர்கள். எங்களால் அமைச்சரவை அலுவலகத்தில் பணிபுரிய முடியாது என மறுத்தனர். ஆனால் லெனின், தோழர்களே நமக்கு நம்பிக்கையான ஆள் அமைச்சரவை செயலகத்திற்கு தேவை. நாம் பழைய அமைச்சரவை அமைப்பை உடைத்துவிட்டோம். இப்போது இருப்பது புதிய அமைப்பு. இதற்காகத் தான் நாம் போராடினோம். இங்கே நாம்தான் பணியாற்ற வேண்டும். நாம் கற்றுக் கொள்ளலாம். பணியாற்ற சிரமம்தான். தவறு செய்தால் திருத்திக்கொள்வோம். இல்லையெனில் கற்றுக்கொள்வோம். அமைச்சரவை தலைவர் என்ற முறையில் கற்றுக்கொள்ளுங்கள் என கூறாமல், கற்றுக்கொள்வோம் என லெனின் தன்னடக்கத்துடன் கூறியது, சந்திக்க வந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது. பின்னர் அவர்கள் அமைச்சரவை அலுவலகத்தில் பணிபுரிய ஒப்புக்கொண்டனர்.
எதிர்ப்புரட்சியாளர்கள் லெனினை குறிவைத்து தாக்க திட்டமிட்டனர். முதலில் 1918 ஜனவரி 1ல் காரில் வந்த போது லெனினை நோக்கிச் சுட்டனர். அருகில் இருந்த சுவிஸ் கம்யூனிஸ்ட் தலைவர் பிளாட்டன், லெனின் தலையை அமுக்கி காப்பாற்றினார். பிளாட்டன் கையை துப்பாக்கி ரவை பதம் பார்த்தது. லெனின் மயிரிழையில் உயிர்தப்பினார். இந்த நிகழ்ச்சிக்கு பின்பு கூட தன்னுடைய பணியில் எந்தவித தொய்வும் இன்றி பணியாற்றினார்.
1918 ஆகஸ்ட் 30 பெத்ரோ கிராத் நகர் கூட்டத்தில் லெனின் பேசவேண்டும். தோழர்கள், வரவேண்டாம்; இங்கே நம் தோழரை எதிர்ப்புரட்சியாளர்கள் கொன்று விட்டார்கள் என்ற எச்சரித்த பின்பும், சிரித்தபடியேஅலைகளுக்கு பயந்தால் மீனவர் மீன் பிடிக்க முடியாது எனவும், மிருகத்திற்கு பயந்தால் வேடன் வேட்டையாட முடியாது எனவும் கூறிவிட்டு, புரட்சியாளர்கள் சமூக மாற்றத்திற்காக போராடுபவர்கள்; உயிருக்கு பயந்தால் துணிச்சலாக செயல்பட முடியாது என கூறிவிட்டு கூட்டத்திற்கு செல்ல லெனின் தயாரானார். கூட்டத்தில் பேசவேண்டிய, அமைச்சரவை கூட்டத்தில் பேசவேண்டியது பற்றி சிந்தித்த படியே காரில் பயணித்தார். திட்டமிட்டபடி கூட்டம் நடை பெற்றதுகூட்டத்தில் லெனின் உரையாற்றினார். கூட்டம் முடிந்து தொழிலாளர்களுடன் திரும்பும்போது திடீரென்று துப்பாக்கி சத்தம், ஆம்; ஒரு குண்டு லெனின் இடது கையில், இரண்டாவது குண்டு கழுத்தில், மூன்றாவது குண்டு முதுகில்; லெனின் கீழே சாய்ந்தார். தொழிலாளர்கள் பதறினர். லெனின், வீட்டுக்கு வண்டியை ஓட்டச் சொன்னார். மூன்று குண்டுகள் பாய்ந்த போதும் தங்கள் இருப்பிடம் மூன்றாவது மாடியில் இருப்பதால் லெனினிடம் மூன்றாவது மாடிக்கு தொழிலாளர்கள் தூக்கிச் சொல்வோம் என்று கூறியபோது மறுத்த லெனின், நான் நன்றாகத்தானே இருக்கிறேன் என்று துணிச்சலாகக் கூறி தொழிலாளர்களின் தோள்களை பிடித்துக் கொண்டே மூன்றாவது மாடிக்குச் சென்றார். தங்கை கதறியபோதுநீ கதறாதே; சின்னக்காயம்தான் உன் அலறல் குருப்ஸ் கயாவை (மனைவியை) கலவரப்படுத்தும்என்று கூறினார். மூன்று குண்டுகள் தாக்கியபோதும் பதறாமல் மக்கள் பணியில் தொடர்ச்சியாக முன்னேறினார். மீண்டுவந்தார். சோசலிச அரசுக்கு தலைமையேற்று நடத்தினார். விடாமுயற்சி, வைராக்கியம், ஏற்றுக்கொண்ட கொள்கையில் உறுதி, தன்னடக்கம் போன்ற பல்வேறு நல்ல பண்புகளைக் கொண்டவர் லெனின்.  ஜார் மன்னனையும், முதலாளிகளையும், நிலப் பிரபுக்களின் கூட்டணியையும், போலிப் புரட்சிவாதிகளையும் வென்றவர் லெனின். 1924 ஜனவரி 21ல் உலகப்புரட்சியாளர் லெனின் மறைந்தார்.
லெனின்பற்றியும்,ரஷ்ய புரட்சியைப் பற்றியும்வருணிக்க முனைந்த மகாகவி பாரதியார்..
மாகாளி பராசக்தி உருசிய நாட்டினிற்
கடைக்கண் வைத்தாள்அங்கே,
ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி,
கொடுங்காலன் அலறி வீழ்ந்தான்,
வாகான தோள்புடைத்தார் வானமரர்,
பேய்க ளெல்லாம் வருந்திக் கண்ணீர்
போகாமற் கண்புதைந்து மடிந்தனவாம்,
வையகத்தீர்புதுமை காணீர்!
என்று கவிதை வடித்திருக்கிறார்நம்மால் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றஅசைக்க  முடியா நம்பிக்கையும்தன் இலக்கைநோக்கி இரவுபகல் பாராமல் உழைக்கும் மனஉறுதியும்எல்லோருக்கும் எல்லாமும்வேண்டும் என்ற பரந்த மனப்பான்மையும்தான்லெனின் என்ற அந்த வரலாற்று நாயகனுக்குவானத்தை வசப்படுத்த உதவிய பண்புகள்அதேபண்புகளை நாமும்  வளர்த்துக்கொண்டால்லெனினைப் போல் ஒரு தேசத்தின் தலையெழுத்தையே மாற்ற முடியா விட்டாலும்குறைந்ததுநம்தலையெழுத்தையாவது மாற்றிக் கொள்ளலாம்நாம் விரும்பும் எந்த  வானத்தையும்  வசப்படுத்திக்கொள்ளலாம்.

1 comment:

Unknown said...

SOORI,NO WORDS TO GREET YOU. KEEP IT UP. BYE SOUNDAR