Tuesday 15 September 2015

அசாம் மக்களை வியப்பில் ஆழ்த்திய சிக்கன முதல்வர் மாணிக் சர்க்கார்-டெக்கான் ஹெரால்ட்...

திரிபுரா முதல்வர் மாணிக் சர்கார் கடந்த வாரம் இந்திய மாணவர் சங்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அசாம் மாநிலம் ஜார்கட் பகுதிக்கு சென்றார். அவரது எளிமை மற்றும் சிக்கனம் ஆகியவற்றை கண்டு அசாம் மக்கள் வியப்பில் ஆழ்ந்ததாக டெக்கான் ஹெரால்ட் பத்திரிகை தெரிவித்துள்ளது. இது குறித்து டெக்கான் ஹெரால்ட் பத்திரிகை வெளியிட்டிருக்கும் செய்தியில் தெரிவித்திருப்பதாவது : “ ரயிலில் நான் கடந்த வியாழனன்று குவகாத்தியில் இருந்து ஜார்கட்டுக்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது பைஜாமா, குர்தா, வெள்ளை முடியுடன் ஒரு மனிதர் நான்கு பாதுகாவர்களுடன் ரயிலில் ஏறினார். அவரைப் பார்த்ததும் எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது. அவர் தான் திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார். ஒரு மாநிலத்தின் முதல்வர் என்ற எந்தவித ஆடம்பரங்களும் இல்லாமல் மிகவும் எளிமையாக 4 பாதுகாவலர்களுடன் ரயிலில் தனக்கான இடத்தை தேடி அமர்ந்தார். அப்போது அவர் அருகில் சென்று வாழ்த்த எனக்கு முதலில் தயக்கமாக இருந்தது. ஆனால் நான் அவரிடம் சென்ற போது சர்க்கார் தன் இருக்கையை விட்டு எழுந்து என்னிடம் சாதாரணமாக பேசி எனக்கு வாழ்த்து தெரிவித்தார். என் வாழ்நாளில் இதுபோன்று எளிமையான அரசியல் வாதியை நான் பார்த்ததே இல்லை என்று ஜார்கட்டைச்சேர்ந்த பி கோகாய் என்பவர் மிகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.இதைத்தொடர்ந்து மறு நாள் காலையில் திரிபுரா முதல்வர் ஜார்கட்டிற்கு வருகை தந்ததையறிந்த அசாம் முதல்வர் தருண் கோகாய் மாணிக் சர்க்கார் தங்கியிருந்த ஜார்கட் விருந்தினர் இல்லத்திற்கு சென்றார். அப்போதும் சர்க்கார் தான் அணிந்திருந்த கைலியுடன் எப்போதும் போல் அசாம் முதல்வரிடம் பேசிக்கொண்டிருந்தார். ஆனால் அவரை சந்திக்க வந்த அசாம் முதல்வர் 100க்கும் மேற்பட்ட பாதுகாவலர்கள் புடை சூழ சென்றிருந்தார். அப்போது அங்கு வந்திருந்த பாதுகாப்பு துறை உயர் அதிகாரிகள் தங்களின் பாதுகாப்பிற்கு எங்கள் மாநில மரபு படி ஏற்பாடுகளை செய்வதாக கூறினார். ஆனால் சர்க்கார் உங்கள் மரபுப்படியே ஒரு பைலட் கார் மட்டும் பாதுகாப்பிற்கு போதும் என்று தெரிவித்துள்ளார். இதனால் வியப்படைந்த அந்த காவல் அதிகாரி அசாமில் சாதாரண எம்எல்ஏக்களுக்கே போதுமான பாதுகாப்பு என்ற பெயரில் நாங்கள் அளிக்கும் பாதுகாப்பு போதும், போதும் என்று ஆகி விடும். ஆனால் சர்க்கார் தனக்கு தேவையில்லாமல் எந்த வித சிறப்பு பாதுகாப்பும் ஏற்பாடுகளும் செய்ய வேண்டாம் என்று தெளிவாக கூறிவிட்டார். இதுபோன்ற உயர்வான மனிதர்கள் பூமியில் குறைந்து கொண்டே வருகின்றனர் என தெரிவித்தார்.ஜார்கட் மக்களோ நீண்ட நாட்களுக்கு பின் இதுபோன்ற எளிமையான சிக்கனமான முதல்வரை நாங்கள் பார்த்துள்ளோம். ஒரு முதல்வர் வெறும் 3 கார்களுடன் சாலையில் செல்வது மிகவும் வியப்பாக உள்ளது. இதுபோன்று எப்போதும் எளிதில் பொது மக்கள் அணுகி தங்கள் பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய அரசியல்வாதிகளே அசாமிற்கு தற்போது தேவையாக உள்ளது என்று அசாம் மக்கள் கூறுகின்றனர் என டெக்கான் ஹெரால்டு பத்திரிகை பதிவு செய்திருக்கிறது.

No comments: