Friday 14 February 2014

முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார்


புதுதில்லி,பிப்.14-ஜன்லோக்பால் மசோதாவை பாஜகவும் காங்கிரசும் ஏற்க மறுத்ததால் தில்லி முதல்வர் கெஜ்ரிவாலின் முயற்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து அவர் ராஜினாமா செய்தார்.மிகுந்த பரபரப்புக்கு மத்தியில் கூடிய தில்லி மாநில சட்டசபையில் ஜன் லோக்பால் மசோதாவுக்கு காங்கிரஸ் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.ஆம் ஆத்மி அரசின் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜன் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்வதற்கு காங்கிரசும், பாஜகவும் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த மசோதாவை ஏற்பதா, வேண்டாமா என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதனையடுத்து மசோதாவை ஏற்க வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து 42 வாக்குகளும், ஆதரவு தெரிவித்து 27 வாக்குகளும் பதிவாகின.இதனையடுத்து ஆரம்ப கட்டத்திலேயே இந்த மசோதா திருப்பி அனுப்பி விடப்பட்டதாகவும், தாக்கல் ஆகவில்லை என்றும் சபாநாயகர் அறிவித்தார்.ஜன் லோக்பால் மசோதா : முன்னதாக, தில்லி மாநிலத் துணை நிலை ஆளுநரின் அறிவுரையை மீறி, கடும் அமளிக்கு இடையே சட்டப்பேரவையில் ஜன் லோக்பால் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளுக்கு வகை செய்யும் இந்த மசோதா மீது விவாதம் மேற்கொள்ளவும், வாக்கெடுப்பு நடத்தவும் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேரவையில் கோரினார்.மசோதாவை தாக்கல் செய்ய எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், பா.. உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.ஜன் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டதும் கடும்அமளி நிலவியதால், சட்டப்பேர வை 20 நிமிடங்களுக்கு ஒத்திவைக் கப்பட்டது.
ஜன் லோக்பால் மசோதாவை வியாழனன்றே அறிமுகப்படுத்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முயன்றபோது, காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், மசோதாஅப்போது தாக்கல் செய்யப்படவில்லை.இம்மசோதாவின்படி, முதல்வர் பதவியை வகிப்பவர் முதல் 4-ம் பிரிவு ஊழியர்கள் வரை அனைத்து அரசு ஊழியர்களும் இந்தச் சட்டத்துக்கு உட்படுத்தப்படுவர். இதன்படி ஊழல் செய்பவர்களுக்கு அதிக பட்சம் ஆயுள் தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.இத்தகைய பின்னணியில் வெள்ளி மதியம் 3.45 மணியளவில் ஜன் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. 277 மற்றும் 278 விதிகளின்படி ஆம் ஆத்மி அரசு மசோதாவை தாக்கல் செய்தது.ஆளுநர் எதிர்ப்பு : முன்னதாக, ஜன்லோக்பால் மசோதாவை தில்லி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யக்கூடாது என்று அந்தமன்ற சபாநாயகருக்கு துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் கடிதம் எழுதியிருந்தார்.அந்த கடிதத்தில் அவர், ஆம் ஆத்மி கட்சியின் ஜன்லோக்பால் மசோதாவை அவையில் தாக்கல் செய்யாதீர்கள். அந்த மசோதாவை அவையில் வைப்பதற்கான நடைமுறையை ஆளும் கட்சி கடைப்பிடிக்கவில்லை. தில்லி சட்டமன்றத்தின் பாதுகாவலர் என்ற முறையில் இதனை நான் பரிசீலனை செய்ய வேண்டியிருக்கிறது.எனது ஒப்புதல்இல்லாமல் மசோதாதாக்கல் செய்வது அரசியலமைப் புக்கு எதிரானது என்று கூறி யிருந்தார்.இதுகுறித்து தில்லி முதல்வர்அரவிந்த் கெஜ்ரிவால் வியாழக்கிழமையன்று இரவு கூறுகையில் சட்ட மன்ற அமர்வை நாங்கள் ஏற்கனவே நீட்டித்துள்ளோம். இது இந்த அரசை காப்பாற்றுவதற்காக இல்லை. மசோதாவை சட்டமன்றத்தில் சமர்ப்பிப்போம். அதற்கு அவர்கள் அனுமதித்தால் சரி, அப்படி அல்லாத பட்சத்தில் நான் பதவியை ராஜினாமா செய்வேன் என்று கூறியிருந்தார்.
கெஜ்ரிவால் விலகல் : இந்நிலையில், மசோதா முன்வைக்கப்படாமலேயே தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஜன் லோக்பால் மசோதாவை தில்லி சட்டசபை நிராகரித்துள்ள சூழ்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் யோகேந்திர யாதவ் கூறுகையில், முதல்வர் பதவியிலிருந்து கெஜ்ரிவால் பதவி விலகுவார் என்பதை நிராகரிக்க முடியாது என தெரிவித் தார்.ஜன்லோக்பால் மசோதா தோல்வியடைந்துள்ள நிலையில், தில்லி அனுமன் சாலையில் உள்ள ஆம் ஆத்மி அலுவலகத்தில் நூற் றுக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். இந்நிலையில், அலுவலகம் திரும்பி தொண்டர்களை சந்தித்த முதல்வர் கெஜ்ரிவால், தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்தார். இதனால் தில்லியில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

No comments: