Tuesday 9 June 2015

அபிமன்யு அல்ல... துரியோதனன்!

``மகாபாரதத்தில் அபிமன்யு 8 வியூகங் களை உடைத்தார். இப்போது நாட்டில் நூற்றுக்கணக்கான மோசமான வியூகங்கள் உள்ளன. மக்கள் ஆசியுடன் அவை உடைக்கப்படுகின்றன’’ என்று பிரதமர் நரேந்திர மோடி தனது ஆட்சியின் ஓராண்டு நிறைவு பொதுக்கூட்டத்தில் மே 25 அன்று .பி.மாநிலம் மதுரா மாவட்டம் நாக்லா சந்த்ரபான் கிராமத்தில் பேசும்போது தன்னைத் தானே முதுகில் தட்டிக் கொடுத்துக் கொண்டு பெருமைப் பட்டிருந்தார். மகாபாரதத்தில் பாண்டவர்களுக்காக போர்க்களம் புகுந்தவன் அபிமன்யு. அவனை அழித்துவிட வேண்டும் என்பதற்காக சக்கரவியூகம் அமைத்து சதி செய்து கொன்றவர்கள் கௌரவர்கள். மாமன் சகுனியின் சதிச்செயல் மூலம் பாண்டவர்களுக்கு அநீதி இழைப்பதையே அல்லும் பகலும் அனுதினமும் செய்தவன் துரியோதனன்.
ஆர்எஸ்எஸ் என்ற சகுனியின் சதித் திட்டங்களை மறைமுகமாகவும் பகிரங்கமாகவும் அரங்கேற்றி வரும் துரியோதனாதியர்கள் அல்லவா மோடி அவர்களே, நீங்களும் உங்கள் அமைச்சர்களும்.ஆர்எஸ்எஸ் - காலால் இடுகிற கட்டளைகளை தலையால் செய்து முடிப்பதற்கென்றே ஆறு குழுக்களை நியமித்து அதை மத்திய அமைச்சரவையுடன் ஒருங்கிணைக்கும் பணியைச் செய்து முடிக்கிற காரியத்திற்கு உங்கள் `அனுக்கசகோதரர் அமித் ஷா அல்லவா பொறுப்பேற்றிருக்கிறார். அவர் அல்லவோ அண்ணனுக்கு ஏற்ற தம்பியான துச்சாதனன்.அபிமன்யு எட்டு வியூகங்களை உடைத்தது உண்மைதான்.
இப்போது நாட்டில் நூற்றுக்கணக்கான மோசமான வியூகங்கள் உள்ளன என்கிறீர்களே, அந்த வியூகங்கள் ஆர்எஸ்எஸ் பரிவாரங்களால் நாட்டு மக்களின் ஒற்றுமைக்கு - ஒருமைப்பாட்டுக்கு - ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்துக்கு - விவசாயிகளின் - தொழிலாளிகளின் - நடுத்தர மக்களின் சிறு வியாபாரிகளின் என அனைத்துப் பகுதி மக்களுக்கும் எதிரான சதிச் செயல்கள் கொண்ட திட்டங்கள் அல்லவா?இந்த வியூகங்கள் மக்களின் ஆசியால் தொழிலாளிகள், விவசாயிகள் உள்ளிட்ட உழைக்கும் மக்களால் ஒவ்வொன்றாக உடைக்கப்படும் மோடி அவர்களே! உங்களது பசப்பு வார்த்தைகளுக்கு மக்கள் மயங்கமாட்டார்கள்உங்களது (மோடி) வித்தை மக்களிடம் இனியும் எடுபடாது. உங்களது உடைப்பு அரசியலும் கட்டாயம் உடைந்து சிதறிப்போகும்.-தீக்கதிர்.

No comments: