Tuesday 6 May 2014

ஜான் பி.சான்டர்ஸ்கொலை வழக்கில் பகத்சிங் அப்பாவி!'

பிரிட்டிஷ் அதிகாரி கொலை வழக்கில் இந்திய சுதந்திர போராட்ட தியாகியான பகத் சிங் தூக்கிலிடப்பட்டார். ஆனால், அவர் அப்பாவி என்றும், போலீஸ் எப்ஐஆரில் அவரது பெயர் இல்லை என்ற  தகவல் 83 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகி உள்ளது.இந்திய சுதந்திர போராட்டத்தின் போது  1928 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் போலீஸ் அதிகாரி ஜான் பி.சான்டர்ஸ் கொலைசெய்யப்பட்டார்.அந்த வழக்கில் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகிய மூவருக்கும் லாகூரில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) உள்ள சத்மான் சவுக் என்ற இடத்தில் 1931ம் ஆண்டு மார்ச் 23ல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள பகத்சிங் நினைவு அறக்கட்டளை தலைவர் இம்தியாஸ் ரஷீத் குரேஷி என்பவர், பாகிஸ்தான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பகத் சிங் மீதான வழக்கின் முதல் தகவல் அறிக்கையின் (எப்ஐஆர்) நகலை வழங்க உத்தரவிடும்படி கேட்டிருந்தார்.இதையடுத்து பகத்சிங் மீது வழக்கு பதிவு செய்த அனார்கலி போலீஸ் நிலையத்தில் இருந்து எப்ஐஆர் நகல் இம்தியாசுக்கு வழங்கப்பட்டது. அதில், "1928ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி அடையாளம் தெரியாத துப்பாக்கி ஏந்திய 2 மர்ம நபர்கள் "என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் புகார்தாரர் மற்றம் சாட்சியங்களின் தகவலின்படி, சுமார் 5 அடி உயரமுள்ள, சிறிய மீசையுடன், இந்துக்களை போன்ற தோற்றம் கொண்ட, வெள்ளை நிற கால் சட்டையும், சாம்பல் நிற குர்தாவும், கறுப்பு நிற தொப்பியும் அணிந்திருந்த நபர்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதுகுறித்து இம்தியாஸ் ரஷீத் குரேஷி கூறுகையில், "இந்த வழக்கில் எப்ஐஆரில் பகத்சிங் பெயர் இல்லை. அவர் ஒரு அப்பாவி என்பதை இந்த உலகுக்கு அறிவிக்க விரும்பினேன். எனவேதான் ஆய்வு செய்து, அவர் மீது பதியப்பட்ட எப்ஐஆரை நீதிமன்றத்தின் மூலமாக பெற்று வெளியிட்டேன்" என்று கூறியுள்ளார். பகத் சிங் அப்பாவி என்ற தகவல் 83 ஆண்டுகளுக்கு பிறகு தெரிய வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments: