Friday 22 August 2014

மக்கள் நலப்பணியாளர்க்குஉடனே வேலை வழங்குக!

உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி மக்கள் நலப் பணியாளர்களுக்கு உடனடியாக மாற்று வேலை வழங்குமாறு தமிழக அரசை மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சி வலியுறுத்தி யுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் மாநிலக்குழுக் கூட்டம் வியாழனன்று (21.8.2014) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். நூர்முகமது தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. வரதராசன், மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், . வாசுகி, . சவுந்தரராசன், கே. பாலகிருஷ்ணன், பி. சம்பத் உள்ளிட்டு மாநில செயற்குழு உறுப்பினர்களும், மாநிலக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:தமிழகத்தில் பணியாற்றி வந்த 12,618 மக்கள் நலப்பணியாளர்கள் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். கடந்த 3 ஆண்டு காலத்திற்கு மேலாக தங்களுக்கு பணி வழங்க வேண்டுமென்று அவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தியதோடு நீதி மன்றத்தையும் நாடினர். அவர்களது வழக்கை பரிசீலித்த சென்னை உயர்நீதிமன்றம் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள 12,618 மக்கள் நலப்பணியாளர்களுக்கும் மாற்றுப்பணி வழங்க வேண்டுமென்றும், இருக்கும் காலியிடங்களில் அவர்களை நியமிக்க வேண்டும் என்றும், வயது வரம்பை கணக்கிடாமல் கல்வித் தகுதியின் அடிப்படையில் அவர்களுக்கு அக்டோபர் 31-ம் தேதிக்குள் பணி வழங்க வேண்டுமென்றும் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் அக்டோபர் 31-க்குள் மாற்றுப்பணி வழங்காவிட்டால் பணி வழங்கப்படும் வரை அவர்கள் மக்கள் நலப்பணியாளராகப் பணி புரிந்த போது கடைசியாகப் பெற்ற ஊதியத்தை அவர்களுக்கு மாதாமாதம் வழங்க வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 3 ஆண்டு காலத்திற்கு மேலாக நீதிக்காக அவர்கள் போராடி இந்தத் தீர்ப்பை பெற்றுள்ளனர். இடைப்பட்ட காலத்தில் அவர்களது குடும்பங்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். நீதிமன்ற தீர்ப்பை மதித்து அவர்களுக்கு உடனடியாக மாற்று வேலை வழங்க வேண்டுமென்று தமிழக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) யின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

No comments: