Tuesday 12 August 2014

வீரத் தியாகி குதிராம் போஸ்: இளங்குரல்

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. காரணம் அவர் ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக முதன்முதலில் துணிச்சலுடன் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி அவர்களைப் பதற்றத்தில் தள்ளியவர். அவர் வேறு யாருமல்ல குதிராம் போஸ்தான்.அவரைப் போல் லட்சக்கணக்கான வீரர்களின் தியாகத்தால்தான் இன்று இந்தியாவில் சுதந்திரக் காற்று வீசுகிறது.
நேருவும் போஸூம்.ஜவஹர்லால் நேரு பிறந்த அதே 1889-ம்ஆண்டில் தான் போஸூம் பிறந்தார். டிசம்பர் 3 அன்று வங்காளத்தின் மிட்னாபூர் மாவட்டத்திலுள்ள ஹபிப்பூர் என்னும் சிறு கிராமத்தில் பிறந்தார். போஸை விட நேரு 20 நாள் மூத்தவர். இருவரின் மனதிலும் இந்தியா முக்கிய இடம் பிடித்திருந்தது. உயிர் இருக்கும்வரை தேசத்திற்காக உழைத்தார் நேரு. உயிரைத் தேசத்திற்காகத் தந்தார் குதிராம் போஸ்.போஸின் அப்பா திரிலோகநாத் பாசு. அம்மா லக்சுமிபிரியா தேவி. பதினோரு வயதிலேயே விடுதலை வேட்கை ஏற்பட்டது அவருக்கு. மக்கள் கூடுமிடங்களில் துண்டுப் பிரசுரம் கொடுப்பதே குதிராம் போஸின் வேலை. அந்தத் துண்டுப் பிரசுரங்களில் ஆங்கில அரசின் அத்துமீறல்களும் அட்டூழியங்களும் விவரிக்கப்பட்டு இருக்கும். தேசம் விடுதலையடைய வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டிருக்கும்.வீரச்செயல்.1908-ல் குதிராம் போஸும் பிரபுல்ல சாகியும் முஸாபர்பூருக்கு மாற்றுப் பெயர்களில் அனுப்பப்பட்டனர். அவர்கள் அங்கு வங்காள மாகாணத்தின் மாஜிட்டிரேட்டான கிங்க்ஸ் போர்டை அரசியல் காரணத்திற்காகக் கொலைசெய்ய வேண்டியிருந்தது. 1908 ஏப்ரல் 30 அன்று தங்கள் திட்டத்தைச் செயல்படுத்த நாள் குறித்தனர். அவர் வழக்கமாகச் சென்றுவரும் ஐரோப்பா கிளப்பிலிருந்து வெளியே வரும்போது குண்டுவீசத் திட்டமிட்டிருந்தனர்.திட்டப்படி கிங்ஸ் போர்டின் வண்டி மீது குண்டை வீசிவிட்டுத் திட்டத்தை வெற்றிகரமாக முடித்துவிட்ட எண்ணத்தில் தப்பிவிட்டனர். ஆனால் நடந்ததோ வேறு. அன்று வண்டியில் கிங்ஸ் போர்டு வந்திருக்கவில்லை. வழக்கறிஞர் பிரிங்கிள் கென்னடி என்பவரின் மனைவியும் மகளும் மட்டுமே அதில் வந்திருந்தனர். போலீஸ் குதிராம் போஸையும் பிரபுல்ல சாகியையும் தேடியது. பிரபுல்ல சாகி போலீஸாரிடம் மாட்டியபோது தற்கொலை செய்துகொண்டார்.
தியாகியாய்மே ஒன்றாம் தேதி குதிராம் போஸ் கைதுசெய்யப்பட்டார். கொலைக் குற்றத்திற்காகவும் பயங்கர ஆயுதங்களை வைத்திருந்த தற்காகவும், குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியதுக்காகவும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டார். நாட்டுக்காக வாழ்வதைப் போன்றே நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்வதிலும் குதிராம் போஸுக்கு மகிழ்ச்சியே இருந்தது. 1908-ம் ஆண்டு ஆகஸ்ட் 11 அன்று தூக்குமேடை ஏறினார். தூக்குக் கயிறு அவரது கழுத்தை இறுக்கினாலும் புகழ்மாலை அவர் மார்பில் நிரந்தரமாகத் தங்கிவிட்டது

No comments: