Thursday 5 December 2013

டிசம்பர் - 6 அம்பேத்கர் நினைவு நாள் . . .


டாக்டர் அம்பேத்கரும், சிந்தனைச்சிற்பி சிங்காரவேலரும் இந்தியாவின் தலைசிறந்த சிந்தனையாளர்கள்; விரிந்த  எல்லைகொண்ட படிப்பாளிகள்; பல்துறை ஞானம் கொண்ட கல்விமான்கள்; மிகப்பின்தங்கிய சமூகத்திலுருந்து மேதைகளாக மாறியவர்கள்; சட்டத்திலும், பொருளாதாரத்திலும் ஆற்றல் மிக்கவர்கள்; தங்கள் இல்லங்களில் பல்லாயிரக்கணக்கான நூல்களையுடைய நூலகங்களை வைத்திருந்தவர்கள்; ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நாளும் உழைத்தவர்கள்; ஒருவர் தொடக்கக் காலத்தில் பௌத்தராக இருந்து பின்னர் மார்க்சியராக மாறியவர். மற்றொருவர் இந்து மதத்தில் இருப்பதை இழிவெனக் கருதிப் பௌத்தராக விளங்கியவர். ஒருவர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுக் காங்கிரஸ்காரராக இருந்து பின்பு பொதுவுடைமை இயக்க முன்னோடியாக விளங்கியவர். மற்றொருவர் தலித் சமுதாயத்திற்காகவே பாடுபட்டு, தேசிய இயக்கத்தையும், பொதுவுடைமை இயக்கத்தையும் வெளியே இருந்து நோக்கியவர். இருவரும் தொழிலாளர்களுக்காக உழைத்தவர்கள்; போராட்டங்களில் பங்கேற்றவர்கள்; இருவரும் அறிவைப் பரப்ப இதழ்களை நடத்தியவர்கள்; ஒருவர் நாத்திகர்; மற்றொருவர் ஆத்திகர். ஒருவர் சமயத்தை முற்றிலும் மறுத்தவர். மற்றொருவர் சமயத்தை விரும்பி மதித்தவர். ஒருவர் உள்நாட்டிலேயே கற்று உலகத் தத்துவத்தை (மார்க்சியம்) ஏற்றவர்; மற்றொருவர் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கற்று உள்நாட்டுத் (பௌத்தம்) தத்துவத்தை ஏற்றவர்; சமுதாய மாற்றத்திற்கு ஒருவர் மார்க்சியத்தை வழிகாட்டியாக ஏற்றவர். மற்றொருவர் சமுதாய மாற்றத்திற்குப் பௌத்தத்தை வழிகாட்டியாகக் கொண்டவர். ஒருவர் 86 ஆண்டுகள் வாழ்ந்தவர்; மற்றொருவர் 65 ஆண்டுகள் வாழ்ந்தவர்; இருவரும் பன்மொழி அறிஞர்கள்; சமுதாயப் போராளிகள்; கொண்ட கொள்கையில் உறுதி வாய்ந்தவர்கள்; இருவரும் நேர்வழி கொண்டவர்கள்; சலசலப்புக்கும் சமரசத்திற்கும் உட்படாதவர்கள். இருவரும் சாதியத்தையும், வருணபேதத்தையும் கடுமையாக எதிர்த்தவர்கள்; அவற்றை அறிவியல் அடிப்படையில் விளக்கியவர்கள்; இருவரும் பெண் முன்னேற்றத்தில் பேரீடுபாடு கொண்டவர்கள்; பெண் சமத்துவத்திற்கு வழிகாட்டியவர்கள்.இருவருக்கும் பல ஒற்றுமைகள் இருந்தாலும் மக்களின் பொருளாதார ஏற்றத் தாழ்வினையும், சாதி வருணப் பேதங்களை ஒழிப்பதிலும் கொள்கை முறையில் வேறுபட்டவர்கள்; அதாவது அடிப்படையில் வேறுபட்டவர்கள்; சமுதாய மாற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் மார்க்சியமே ஏற்றதென்றவர் சிங்காரவேலர். டாக்டர் அம்பேத்கரோ பௌத்தமே சரியானது என்றவர். இன்றைய நிலையில் இது மறுவாசிப்புக்கும் மறுசிந்தனைக்கும் உரியது. இருவர் பார்வையிலும் எது சரி என்பதை சில நிகழ்வுகளின் மூலம் ஒப்பிட்டு நோக்குவது பொருத்தமானது.

No comments: