Wednesday 11 March 2015

உலக சிறுநீரக தினம்: 1 சிறுநீரகத்துடனும் உயிர் வாழலாம்...!

தினமும் உடலில் உண்டாகும் நச்சுப்பொருட்களை வடிகட்டி கழிவுகளை சிறுநீரில் அனுப்பும் முக்கிய பணியை சிறுநீரகம் செய்து கொண்டிருக்கிறது. பொதுவாக மனிதர்களுக்கு இரண்டு சிறுநீரகம் உண்டு. அபூர்வமாக சிலருக்கு இயற்கையிலோ அல்லது சூழ்நிலையின் காரணமாகவோ ஒரு சிறுநீரகம் அமைந்து விடுவதுண்டு. நிஜத்தில் ஒரே ஒரு சிறுநீரகத்துடன் பிறந்த பெரும்பாலானவர்கள் அவர்களுக்கு ஒரு சிறுநீரகம் மட்டுமே உண்டு என்பதை அறியாமலேயே தங்கள் முழு வாழ்வையும் வாழ்ந்து முடித்து விடுகின்றனர். இதில் சிலரே எதேச்சையாக வேறு காரணங்களுக்காக பரிசோதிக்கப்படும் போது அவர்களுக்கு ஒரு சிறுநீரகம் மட்டுமே உள்ளது என்பதை அறிகின்றனர். இனி ஒரு சிறுநீரகத்துடன் தன் வாழ்நாளை வாழ வேண்டியுள்ளது குறித்து அவர்களுக்கு பல கவலைகள் இருக்கலாம். இக்கட்டுரை இந்த சந்தேகங்களுக்கு விடையளிக்கும். ஆயிரத்தில் ஒருவருக்கு பிறக்கும் போதே ஒரே ஒரு சிறுநீரகத்துடன் மட்டுமே பிறக்க வாய்ப்பு உண்டு. பலருக்கு இதனால எந்த தொந்திரவும் இல்லாமல் வேறு காரணங்களுக்காக மருத்துவமனையில் வயிற்றுக்கு ஸ்கேன் செய்யும் போது எதேச்சையாக கண்டுபிடிக்கப்படுவது உண்டு. சிலருக்கு சிறுநீரகத்தில் கட்டி அல்லது சிறுநீரகக் குழாயில் கல், மற்ற காரணங்களால் அடைப்பு கிருமித் தாக்கம், விபத்தில் சிறுநீரகம் சிதைவு ஆகிய காரணங்களால் ஒரு சிறுநீரகத்தை அறுவை சிகிச்சையில் அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கலாம். தங்கள் உறவினர் அல்லது நண்பர்களுக்கு, அவர்களின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்தால் தங்களின் இரண்டு சிறுநீரகங்களில் ஒரு சிறுநீரகத்தைத் தானமாக தந்தவர்களும் உண்டு. இரண்டு சிறுநீரகங்களும் நன்கு ஆரோக்கியமாக இயங்கும் ஒரு நபர் ஒன்றை இன்னொருவர் உயிர் காக்க தானமாக தந்த பிறகு அவர்களுடைய மற்ற சிறுநீரகம் அவரது எஞ்சிய வாழ்நாள் முழுவதும் நன்கு இயங்கி அவரை ஆரோக்யமாகவே வைத்திருக்கின்றது. உண்மையில் ஒரு ஆய்வு சிறுநீரக தானம் கொடுத்தவர்கள் அவரது வயதொத்தவர்களை விட அதிக காலம் உயிர் வாழ்வதாக சொல்கின்றது. இப்படிப்பட்டவர்களில் மிகச்சிலருக்கு 10-15 வருடங்களுக்கு பிறகு உயர் இரத்த அழுத்தம், சிறுநீரில் புரத ஒழுக்கு ஆகிய சில சிறிய எளிதில் சிகிச்சை அளிக்கக் கூடிய தொந்திரவுகள் வரலாம். ஒரு சிறுநீரகம் மட்டுமே உள்ளதாக சிறுவயதிலேயோ பின்னாளிலோ கண்டுபிடிக்கப்பட்டவர்கள் ஒரு சிறுநீரக மருத்துவ நிபுணரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும். அவர் இந்த ஒரு சிறுநீரகத்தின் முழு ஆரோக்யத்தை எளிய பரிசோதனைகள் மூலம் உறுதி செய்வார். சிறுநீரகம் நன்றாகவே இருந்தாலும் முறையான இடைவெளிகளில் (6வருடம் ஒரு முறை) தொடர்ந்து சிறுநீரக மருத்துவரை கலந்து கொள்வது சிறந்தது. இது சிறுநீரக தானம் கொடுத்தவர்களுக்கும் வேறு காரணங்களுக்காக ஒரு சிறுநீரகத்தை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்ற வேண்டி வந்தவர்களுக்கும் பொருந்தும். அபூர்வமாக ஒற்றை சிறுநீரகத்தில் பாதிப்பு ஏதும் இருப்பதாக கண்டு பிடிக்கப்பட்டால் சிறுநீரக மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்து கொள்ள வேண்டும். ஒற்றை சிறுநீரகம் ஆரோக்யமாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டவர்களுக்கு உணவிலோ, மற்ற பழக்க வழக்கங்களிலோ எந்த மாற்றமும் செய்ய வேண்டியதில்லை. குழந்தை பெறுவதிலும் எந்த சிக்கலும் கிடையாது.

No comments: