Wednesday 11 March 2015

5 பொதுத் துறை நிறுவனங்கள் மூடப்படும்: மத்திய அரசு...

நஷ்டத்தில் செயல்படும் ஏர் இந்தியா, எம்.டி.என்.எல்., ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் உள்ளிட்ட 65 பொதுத் துறை நிறுவனங்களில், 5 நிறுவனங்கள் மூடப்பட இருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.
இதுதொடர்பாக மக்களவையில் கேள்வி நேரத்தின்போது மத்திய கனரக தொழிற்சாலைகள் துறை அமைச்சர் அனந்த் கீதே செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
5 பொதுத் துறை நிறுவனங்கள் மூடப்படவுள்ளன. அதில், கைக்கடிகாரம், டிராக்டர்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஹெச்.எம்.டி. நிறுவனத்தின் 3 பிரிவுகள் அடங்கும். அங்கு பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, தானாக ஓய்வு பெறும் திட்டத்தின் கீழ் உரிய நிதி பெற்றுக் கொண்டு ஒய்வு பெறலாம் என கூறப்பட்டுள்ளது என்றார்.
எனினும், மூடப்படவுள்ள பிற பொதுத் துறை நிறுவனங்களின் பெயர்களை மத்திய அமைச்சர் அனந்த் கீதே வெளியிடவில்லை.
விமானம், செல்லிடப்பேசி துறைகளில் புகழ்பெற்று விளங்கிய ஏர் இந்தியா, எம்.டி.என்.எல். ஆகிய நிறுவனங்கள், கடந்த 4 ஆண்டுகளாக லாபத்தை ஈட்டவில்லை.
இதுதொடர்பாக மக்களவையில் தாக்கல் செய்ய அறிக்கைகளில், ஏர் இந்தியா நிறுவனம், 2011-12ஆம் நிதியாண்டில் ரூ. 7559 கோடியும், 2012-13ஆம் நிதியாண்டில் ரூ.5,490 கோடியும், 2013-14ஆம் நிதியாண்டில் ரூ.5,388 கோடியும் நஷ்டத்தை சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
எம்.டி.என்.எல். நிறுவனம், 2013-14ஆம் நிதியாண்டில் ரூ.7,820 கோடி லாபத்தில் செயல்பட்டது. ஆனால், அதற்கு முந்தைய 2 நிதியாண்டுகளில் ரூ. 5,321 கோடியும், ரூ. 4,109 கோடியும் நஷ்டத்தை சந்தித்தது. ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் நிறுவனம், கடந்த 3 நிதியாண்டுகளில், முறையே ரூ.859 கோடி, ரூ.551 கோடி, ரூ. 462 கோடி நஷ்டத்தை சந்தித்தது என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா பயணிகள் கட்டண வருவாய் அதிகரிப்பு
ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு பயணிகள் போக்குவரத்து மூலம் கிடைக்கும் வருவாய் அதிகரித்துள்ளது என்று மக்களவையில் மத்திய விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்தார்.
இதுதொடர்பாக அரக்கோணம் மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் ஜி.ஹரி எழுப்பியிருந்த கேள்விக்கு மக்களவையில் அமைச்சர் மகேஷ் சர்மா எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
பயணிகள் போக்குவரத்து அதிகரிப்பால் ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு பயணிகள் கட்டண வருவாயும் கடந்த மூன்று ஆண்டுகள் காலத்தில் அதிகரித்துள்ளது. அதன்படி 2011-12-ஆம் ஆண்டில் ரூ.11,423 கோடி, 2012-13-இல் ரூ.12,494 கோடி, 2013-14-இல் ரூ.14,150.73 கோடி எனக் கட்டண வருவாய் கிடைத்துள்ளது. 2014-15-இல் ரூ.16,377 கோடி கட்டண வருவாய் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
ரயில்வே வருவாய் அதிகரிப்பு: ரயில்வே வருவாய் அதிகரிப்பு தொடர்பாக ஜி.ஹரி எம்.பி. எழுப்பியிருந்த மற்றொரு கேள்விக்கு மக்களவையில் ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா செவ்வாய்க்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
2013-14-ஆம் நிதியாண்டில் ரயில்வே துறை வருவாய் ரூ.1,11,943.38 கோடியாக இருந்தது. இது 2014-15-இல் (ஜனவரி 15 வரை) 1,27,073.85 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது, ரூ.15,130.47 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது என்றார் அவர்.

No comments: