Thursday 29 January 2015

வயதோ 17...தான், வாங்கிய சான்றிதழ்கள் 700 ...!

முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை' என்பதற்கேற்ப பல துறைகளிலும் முத்திரைப் பதித்து வருகிறார், பன்முகத்திறமைக் கொண்ட பூர்ணிமா முருகேசன். வயதோ 17, ஆனால் வாங்கிய சான்றிதழ்கள் மட்டுமே 700, இதைத் தவிர வென்ற கோப்பைகளும் வாங்கிய பட்டங்களும் 250 – எட்டுகின்றன.இரண்டரை வயதில் நடனத்தோடு தொடங்கிய இவரது கலைப் பயணம், இன்று வரை தொடர் கதையாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஈவினிங் காலேஜூ முடிந்து வந்த களைப்பு கூட இல்லாமல் நம்முடன் பொறுமையாகப் பேசினார் பூர்ணிமா.பிறந்தது திருநெல்வேலி, வளர்ந்தது படிச்சது எல்லாம் புதுச்சேரிதான். எங்க அம்மா அப்பாதான் எனக்கு முழு சப்போர்ட். சின்ன வயசுல நாட்டியம் கத்துக்க ஆரம்பிச்சேன் ,அப்புறம்  படிப்படியாக முன்னேறி வாய்பாட்டு, நடனம், நடிப்பு, ஸ்கேட்டிங், (ஸ்கேட்டிங் வித் டான்ஸ்), விளையாட்டு, வீணை , போட்டோகிராபி, என எல்லா துறைகளில் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பல பரிசுகள் வாங்கிருக் கேன். நிறைய கலைகள் கற்றாலும் எனக்கு ஒரு வரப்பிரசாத மாய் வந்த கலை வீணைதான். சின்ன வயசுல என் அம்மா வாசிப்பதை பார்த்து வீணை மேல் வந்த ஆர்வம்தான் எனது 8ஆம் வயதிலயே என்னை மேடை ஏற வைத்தது " என்கிறார்இப்பொழுது ஆச்சாரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங்கலை ஆங்கிலம் படித்துக் கொண்டு இருக்கிறார் பூர்ணிமா. இவரது பன்முகத்திறன்களைக் கண்டு அக்கல்லூரி மூன்று வருட படிப்பையும் முழு ஸ்காலர்ஷிப்பில் படிக்க சலுகைகொடுத்துள்ளது.புதுவை முதல் திருநெல்வேலி வரை கிட்டதட்ட 50-க்கும் மேற்பட்ட கோவில்களிலும், 50-க்கும் மேற்பட்ட கச்சேரிகளிலும் வீணை வாசித்துள்ளார் . அது மட்டுமல்லாமல் தூர்தர்ஷன், பொதிகை  என பல தொலைகாட்சிகளிலும் இவரின் இசைக் கச்சேரி ஒளிபரப்பாகி உள்ளதுஎப்பொழுதும் புத்துணர்ச்சியாக இருக்கும் பூர்ணிமாவிடம், இரண்டு தனித்தன்மை வாய்ந்த விஷயங்கள்உள்ளன.முதல் விஷயம், பொதுவாக வீணை வாசிப்பவர்கள்  2.5 முதல் 3 கட்டைகள் வரைதான் வாசிப்பார்கள். ஆனால் பூர்ணிமாவோ தன் குருவைப் போலவே 5.5 ( ஐந்தரை கட்டையில்) வாசித்து அனைவரையும் மிரள வைத்துள்ளார்.
இரண்டாவது விஷயம், ரசிகர்கள் கேட்கும் சினிமா பாடல்களை எந்த குறிப்புகளும் இன்றி அப்படியே வாசிக்கும் இவரது அபாரத் திறமை.12.12.2012 அன்று 12 பேர்கொண்ட குழுவாக அமர்ந்து கொண்டு தொடர்ந்து 12 மணி நேரம் வீணை வாசித்து ஒரே நேரத்தில் எலைட்டு, யூனிக், ஏசியன், இந்தியன், தமிழன் உள்ளிட்ட 5 சாதனை புத்தகங்களிலும் இடம் பெற்று உள்ளார்.பொதுவாக நவராத்திரியின் பொழுது வீடுகளில் பொம்மைகள்தான் கொலுவாக இருக்கும், ஆனால் இவரது வீட்டிலோ இவர் வாங்கிய 700 சான்றிதழ்களும் 250 கோப்பைகளும்தான் சூழ்ந்துள்ளது.உங்கள் வெற்றியின் ரகசியம் தான் என்ன?என் பெற்றோர்தான் என் வெற்றியின் ரகசியம். நான் எல்லா துறைகளிலும் தடம்பதிக்க ரொம்ப ஊக்கம் கொடுத்தாங்கஎன்னைப் பொறுத்தவரை நான் எந்தத் துறையில இறங்கினாலும் அதில் முழு கவனத்துடன் ஈடுபடுவேன். இன்னும் நான் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு; ஆய கலைகள் 64-யும் கற்றுக்கொள்ள ஆசையாக இருக்குஇதுமட்டும் இல்லாம எனக்கு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி IFS ஆகி நம் நாட்டுப் பண்பாட்டையும், முக்கியமாக இசையையும் உலகமெங்கும் பரப்ப ஆசை. ஓர் உலகத் தரத்திலான பள்ளி ஆரம்பித்து அதில் படிப்பு முதல் அனைத்து கலைகளையும் கற்றுக் கொடுக்க ஆசை. இதையும் செய்து முடிப்பேன்!'எவ்வளவோ பண்ணிட்டோம்.. இத பண்ணமாட்டோமா??' என்று  புன்னகையுடன்  விடை கொடுக்கிறார் பூர்ணிமா...  பூர்ணிமாவை வாழ்த்துவோம்..!

No comments: