Thursday 15 January 2015

தேர்தலில் மீறல்: மத்திய அமைச்சர் நக்விக்கு ஓராண்டு சிறை.

கடந்த 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது தடை உத்தரவை மீறியது தொடர்பான வழக்கில், மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான முக்தார் அப்பாஸ் நக்விக்கு ராம்பூர் நீதிமன்றம் புதன்கிழமை ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தது.
கடந்த 2009ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது, உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பட்வாய் பகுதியில், ராம்பூர் பாஜக தலைவர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தடை உத்தரவை மீறி, நக்வி தலைமையில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் தேர்தல் அதிகாரியின் வாகனத்தை கைப்பற்றியதோடு, அங்குள்ள காவல் நிலையத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்றனர். இதையடுத்து, நக்வி உள்பட சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, நக்வி உள்ளிட்ட 19 பேருக்கு எதிராகத் தேர்தலின்போது தடை உத்தரவை மீறியதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து ராம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு அளித்தது. தீர்ப்பில், நீதிபதி மணீஷ் குமார் தெரிவித்ததாவது:
இந்திய தண்டனைச் சட்டத்தின் (.பி.சி.) 143, 341, 342, குற்றவியல் சட்டத் திருத்தச் சட்டத்தின் (சிஆர்பிசி) 144ஆவது பிரிவின் கீழ் நக்வியை குற்றவாளியாக அறிவிக்கிறேன்.
இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 18 பேரையும் குற்றவாளிகள் என்று அறிவிக்கிறேன். மேற்கண்ட 19 பேருக்கும் தலா ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கிறேன் என்றார் அவர்.

No comments: