Tuesday 20 January 2015

ஜன.22ல்- அரசு ஊழியர்கள்ஒட்டுமொத்த விடுப்பு போராட்டம்...

ஜனவரி 22ல் ஒட்டுமொத்த சிறுவிடுப்புப் போராட்டம் நடத்த அரசு ஊழியர் சங்கம் முடிவு செய்துள்ளது.அதிமுகவின் சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக்கோரியும், 50சதவீத அகவிலைப்படியை ஊதியத்துடன் இணைத்தல், மத்திய அரசு ஊழியருக்கு இணையான படிகள் வழங்குதல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 22ம்தேதி அன்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்துவது என்று கடந்த அக்டோபர் 17, 18, 19 தேதிகளில் நாகப்பட்டினத்தில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 11ஆம் மாநில மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டது.
இப்போராட்ட முடிவு ஏற்கெனவே தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகளை அழைத்துப்பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுகோள் வைக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசுவதற்கு தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மாநில மாநாட்டு முடிவின்படி வரும் 22ம்தேதி அன்று திட்டமிட்டபடி ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இப்போராட்டத்தில் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர் என்று சங்கத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்செல்வி, பொதுச் செயலாளர் இரா.பாலசுப்பிரமணியன் ஆகியோர் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளனர்.

No comments: