Sunday 18 January 2015

1982 ஜனவரி -19 வேலை நிறுத்தம்-தியாகிகள் தினம்...

அருமைத் தோழர்களே ! தபால்-தந்தி ஊழியர் இயக்கத்தில் விரும்பத்தகாத நிகழ்ச்சிப்  போக்குகள் இருந்த அந்த காலத்தில் இந்திய தொழிலாளி வர்க்கத்தினிடையே ஒற்றுமையின் தேவையும், அவசியமும் உணரப்பட்டு வந்தது. 1981 ஜூன் 4லில் பம்பாய் சிறப்பு மாநாடு நடைபெற்றது.CITU தொழிற்சங்கம் முன்கையெடுத்த இந்த மாநாட்டில் AITUC, HMS, BMS, UTUC, UTUC(S), UTCC, INTUC (Tara குரூப்) ஆகிய மத்திய தொழிற்சங்கங்களும், இரயில்வே, பாதுகாப்பு, ஆயுள் காப்பீடு, வங்கி ஊழியர் சங்கம் போன்ற 40 தொழிற்சங்க அமைப்புகளும் பங்கு கொண்டன. 3000-த்துக்கும் மேற்பட்டோர் பிரதிநிதிகளாக கலந்து கொண்டனர்.  அந்த மாநாட்டில் உழைக்கும் மக்களின் கோரிக்கைகள் வலியுறித்தப்பட்டதுடன் இந்திர காங்கிரஸ் அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோதக் கொள்கைகளை எதிர்த்த தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. தேசிய பிரச்சாரக்குழுவின் முடிவின்படி 1981, நவம்பர் 23 டெல்லி பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, 1982 ஜனவரி 19-ல் நாடு தழுவிய ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடப்பட்டது.
உயிர்த்தியாகம் செய்த விவசாயக் கூலிகள்- அஞ்சான், நாகூரான், ஞானசேகரன்  
     1982 ஜனவரி -19 வேலைநிறுத்தத்தில் இந்திய தொழிற்சங்க வரலாற்றில் அதுவரை வெறும் கோஷமாக இருந்த "தொழிலாளர் ஒற்றுமை" மற்றும் "தொழிற்சங்க ஒற்றுமை" என்பது நடைமுறையில் காணப்பட்டது. ஒரு கோடியே 20 லட்சம் உழைப்பாளர்கள் கலந்துகொண்ட மகத்தான வேலை நிறுத்தமாக அது அமைந்தது. எண்ணிக்கை மட்டுமல்ல, பல்வேறு அரசியல், சித்தாந்த வேலிகளைத் தாண்டி வெளிப்பட்ட ஒன்றுபட்ட நிகழ்ச்சியாக அது அமைந்தது.
ஜனவரி 19 வேலை நிறுத்தம் என்பது ஒரு அரசியல் நடவடிக்கை என்று மத்திய அரசு குற்றம் சாட்டியது. ஆம் ! அது உண்மைதான். விலைவாசி உயர்வுக்கு காரணமாக கொள்கையும், உழைப்பாளி மக்களின் உரிமைகளை மறுத்து, அவர்களது இயக்கங்களை நசுக்கிட ஆள் தூக்கி சட்டங்களை ஏவி விடுவதும் அரசியல் சம்பந்தப்பட்டவைகளை இருக்கும் போது அவற்றை எதிர்த்துப் போராடுவது எப்படி அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க முடியும் என்ற பதிலைத்தான் மத்திய அரசுக்கு ஜனவரி 19 வேலை நிறுத்தம் உணர்த்தியது. வேலை நிறுத்தத்தை முறியடிக்க அரசின் அடக்குமுறை எந்திரங்கள் அனைத்தும் இறக்கி விடப்பட்டன. பிரதமரும், உள்துறை அமைச்சரும் நேரடியாக எச்சரிக்கை விடுத்தனர். சில மாநிலங்களில் "கண்டதும் சுடு" என்ற ஆணை போலீசுக்கு விடப்பட்டது. அனைத்து அடக்குமுறையையும் தாண்டி நாடு முழுவதும் தொழிற்சங்கம் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் த்த வேலை நிறுத்தத்தில் உள்ளபூர்வமாக பங்கேற்றனர்.
      தமிழகத்தில் எதிர்கட்சியாக இருந்த திமுக இந்த வேலை நிறுத்தத்தை ஆதரிக்கவில்லை. ஆலிம் கட்சியாக இருந்த அண்ணா திமுக வேலை நிறுத்தத்தை உடைக்கவும், அடக்குமுறையை ஏவவும் தீவிரமாக செயல்பட்டது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டனர். ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்ததற்காக எட்டு நாள் ஊதியத்தை அதிமுக அரசு வெட்டியது. அத்துடன் அதன் அடக்கு முறை நிற்கவில்லை. தஞ்சையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் என்ற மூன்று விவசாயக்கூலிகள் துப்பாக்கிக் குண்டிற்கு இரையாகினர்.
அன்புமிக்க தோழனே ......சமீபத்தில் நடந்து முடிந்த மாவட்டசெயற்குழு கூட்டங்களில், சில தோழர்கள் மலை போல் வேலைகள் குவிந்து கிடப்பதாக உணர்ந்தனர். நமது இயக்கம் வேலைகளை கொடுத்துக் கொண்டே இருக்கிறதா? என்றும் சிலர் கேட்கின்றனர். சமூகத்தில் நாம் முடிக்க வேண்டிய பணிகள் முடியாமல், கேடு கெட்ட முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ சமூகத்தின் கால நீடிப்பு இருக்கிற வரைவேலைகள் ஓயப்போவதில்லை.’’
தடைகள் இருக்கின்றன .......
தகர்க்கச் சொல்லுங்கள்!
துயரங்களும் துன்பங்களும்  .......
தோன்றக் கூடும்
அழிக்கச் சொல்லுங்கள்!     ......
இன்பத்தின் விலையை அறிய முடியாதவர்கள்
இன்புறவே இயலாது!      .......
தவறு என கண்டதை
மன்னிக்காதீர் ஏனெனில்  .......
அவை திரும்பவும்
நேர்ந்து அதிகமாகக் கூடும்.......தியாகிகளுக்கு மதுரை BSNLEU மாவட்ட சங்கம் செவ்வணக்கம் செலுத்துகிறது.---நினைவுகளுடன், எஸ். சூரியன் ...D/S-BSNLEU.

No comments: