Monday 26 January 2015

ஆக்ரா பயணம் ரத்து- உண்மைக் காரணம் என்ன?


““அமெரிக்க அதிபர் ஒபாமா இந்திய வருகையின் பொழுது தாஜ் மகாலுக்கு செல்லவிருந்த பயணத் திட்டம் ரத்தானதற்கு காரணம் உச்ச நீதிமன்றத்தின் ஆணைப் படி தாஜ்மகால் வளாகத்திற்குள் ஜனாதிபதி சிறப்பு பாதுகாப்பு வசதி கொண்ட வாகனங்களை அனுமதிக்க முடியாது என்பதால் அதற்கு அனுமதி மறுத்து உத்தரப்பிரதேச அரசாங்கம் ...
சாதாரண கால்ப் வாகனத்தில் தான் தாஜ் மகாலுக்குள் சென்று சுற்றிப் பார்க்க அனுமதிக்க உச்சநீதிமன்ற அறிவுரை உள்ளது என்றும் வேண்டுமானால் அதை உச்ச நீதிமன்றத்திற்கு சென்று திருத்தம் செய்து ஆணையை கொண்டு வாருங்கள் அனுமதிக்கிறோம் என்றும் கூறிவிட்டதாகவும் , அதற்கு போதிய அவகாசம் இல்லாத காரணத்தால் பயணத் திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது என்றும் தெரிய வருகிறது...
தில்லியில் இருக்கும் குரங்குகள் முதல் பெருச்சாளிகள் வரை அனைத்தையும் ஒபாமா வருகையை காரணம் காண்பித்து விரட்டிக் கொண்டும் மிரட்டிக் கொண்டும் இருக்கும் மத்திய அரசாங்கத்திற்கு அடிபணியாமல் இருந்த உத்தரப்பிரதேச அரசாங்கத்திற்கு வாழ்த்துகள்”- இது கிஷோர் கே சாமி என்பவர் முகநூலில் சனிக்கிழமை(24-1-15) போட்ட பதிவு . சில ஆங்கில ஏடுகளும் உறுதிசெய்யும் செய்தி இது. சவூதி அரேபிய மன்னர் மறைவுக்கு செல்வதால் ஆக்ரா பயணம் ரத்து என்பது அதிகாரப்பூர்வ சமாளிப்பு. ஆயினும் இரண்டையும் ஏற்க முடியவில்லை. அரசு விரும்பினால் இந்திய பயணத்தில் சில நிகழ்வுகளை மாற்றி அமைத்து தாஜ்மகாலை பார்வையிடச் செய்திருக்க முடியும் . உலகை வியக்க வைக்கும் அந்த கலைப்பெட்டகத்தை அவரும் கண்டு மகிழ்ந்திருப்பார். உ.பி அரசின் தடையும் உச்சநீதிமன்ற உத்தரவும் கூட காரணமாக இருக்க முடியாது. அரசு விரும்பினால் ஒரு மணி நேரத்தில் உச்சநீதிமன்றத்தில் விதிவிலக்கு பெறமுடியும்.ஏனெனில் நீதிபதிகளின் அமெரிக்க மோகமும் குறைவல்ல. ஆக , உண்மைக்காரணம் இரண்டும் அல்ல. ஆக்ரா நிகழ்ச்சி ரத்தானதால் மோடி மகிழ்ச்சியடைந்தாராம். ஏன் தெரியுமா?தாஜ்மகாலை ஒபாமா பெருமைப் படுத்துவதையோ புகழ்வதையோ மோடி அரசு - ஆர் எஸ் எஸ் தலைமை விரும்பவில்லை. ஏற்கெனவே அதனை இடிக்க வேண்டும் என்றும் சிவன் கோயில் இருந்த இடமென்றும் காவிக்கூட்டம் மதவெறியோடு பிதற்றி வருகிறது.
ஒபாமா அங்கு சென்றால் தாஜ்மகாலின் சரித்திரப் பெருமை மீண்டும் ஒரு முறை உலக அரங்கில் பேசப்படும். இதனை தடுக்க என்ன செய்வதென்று மோடி தவித்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் கிடைத்த சின்ன சாக்குகளைக் காட்டி அதனை பார்வையிடாமல் மோடி தடுத்துவிட்டாரோ?   - சு.பொ.அகத்தியலிங்கம்.

No comments: