Monday 9 September 2013

தொழிலாளர்களின் நெஞ்சங்களில் ஓர் எரிமலை . . .

மாநிலங்களவையில் தபன்சென் ஆற்றிய உரையின் சாராம்சம் வருமாறு:இந்தச் சட்டமுன்வடிவை எங்கள் கட்சியின் சார்பில் எதிர்க்கிறோம். இந்தச் சட்டமுன்வடிவின் மீதான பரிந்துரைகளைச் செய்வதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழுவில் அனைத்து உறுப்பினர்கள் மத்தியிலும் பொதுவாக கருத்தொற்றுமை இருந்தது. நாட்டில் உள்ள அனைத்துத் தொழிற்சங்க இயக்கமும் இதனை எதிர்த்து வருகின்றன. இடதுசாரி தொழிற்சங்கம், வலதுசாரி தொழிற்சங்கம், இரண்டுக்கும் மத்தியில் உள்ள தொழிற்சங்கம் என இவைகளுக்குள் எந்த வித்தியாசமும் இன்றி அனைத்து சங்கங்களும் இதனை எதிர்த்து வந்தன. இச்சட்டமுன்வடிவு இங்கே கொண்டுவரப்பட்டிருப்பதன் மூலம் தங்களுக்கு மாபெரும் நம்பிக்கைத் துரோகம் செய்யப்பட்டுவிட் டதாக தொழிலாளர்கள் கருதுகிறார்கள். நாடு முழுதும் பல்வேறு இயக்கங்கள் மூலம் அவர்கள் தங்கள் எதிர்ப்பு களையும் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம் இதனைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருசிலரைத் திருப்திப்படுத்துவதன் மூலம் மட்டும் நீங்கள் ஆட்சியை நடத்திவிட முடியாது.இந்த நாட்டின் தொழிலாளி வர்க்கம் வஞ்சிக்கப்பட் டிருக்கிறது.
இந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை உருவாக்குபவர்கள், உங்கள் கருவூலத்திற்கு வருவாயைத் தேடித்தருபவர்கள், வேலையளிப்பவர்களுக்கு லாபத்தை ஈட்டித்தருபவர்கள் வஞ்சிக்கப்பட்டிருக்கிறார்கள். நம் நாட்டில் இயங்கிவரும் சில தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அரசாங்கத்தையும், தங்களை நம்பி காப்பீடு செய்துள்ள காப்பீட்டுதாரர்களையும் ஏமாற்றி வருவது குறித்து ஜனவரி 1 முதல் இந்த அரசாங்கத்திற்கு நான் எழுதிக்கொண்டு இருக்கிறேன். இவர்களின் மோசடியான நடவடிக்கைகளின் காரணமாக முறைசாராத் தொழிலாளர்களும், நெசவாளர்களும், கைவினைஞர்களும் மிகவும் மோசமான முறையில் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இதற்கு மிகவும் தெளிவான முறையில் சாட்சியங்கள் இருக்கின்றன. இதுதொடர்பாக நிதி அமைச்சகத்திற்கும், ஐஆர்டிஏ எனப் படும் இன்சூரன்ஸ் முறைப்படுத்தல் மற்றும் வளர்ச்சி ஆணையத்திற்கும் ஜனவரி 1லிருந்து இன்றுவரை எழுதிக்கொண்டிருக்கிறேன். ஆனால் இதுவரை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை. அயல்நாடுகளிலிருந்து அந்நிய மூலதனம் கொட் டும் என்ற எதிர்பார்ப்புடன் அவர்கள் மீது எந்த நடவடிக் கையும் இதுவரை இல்லை. தனியார் இன்சூரன்ஸிலேயே இது போன்றநிலை என்றால், ஓய்வூதிய நிதி யத்தின் கதி என்னாகும்? ஓய்வூதியம் என்பது ஓய்வூதியர்களுக்குப் பயன் அளிக்கும் திட்டம் என்றிருந்ததை இந்த அரசாங்கம் ஓய்வூதியர்கள் பங்களிப்பு அளிக்கும் திட்டம் என்று மாற்றி இருக்கிறது. இப்புதிய திட்டத்தில் ஓய்வூதியர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய ஓய் வூதியத்தைத் தவிர மற்ற எல்லாமே உத்தரவாதப்படுத்தப் பட்டிருக்கிறது.இந்த ஓய்வூதிய நிதியத்தை யார் கையாளப்போவது? இதிலிருந்து பயன் அடையப் போவது யார்? அனைத்தும் உத்தரவாதப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் ஓய்வூதியப் பங்களிப்பினை தன் ஊதியத்தில் பத்து விழுக்காடு என ஒவ்வொரு மாதமும் தன் வாழ்நாள் முழுதும் செலுத்தி வரும் ஊழியர் பெறப்போகும் ஓய்வூதியம் என்ன என்பது மட்டும் உத்தரவாதப்படுத்தப்படவில்லை. அரசாங்கத்தின் நோக்கம்தான் என்ன? மக்களவையி லும், மாநிலங்களவையிலும் அரசியல் கருத்தொற்றுமை மூலம் பெரும்பான்மையைப் பெற்று இச்சட்டமுன்வடிவை நீங்கள் நிறைவேற்றிக் கொள்ளலாம். ஆனால் நாடு முழுதும், ஏன் உலகம் முழுவதும், படிப்படியாக தொழிலாளர்களின் நெஞ்சங்களில் ஓர் எரிமலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை மறவாதீர்கள். இத்தகைய மோசடியை தொழிலாளர்கள் ஏற்க மாட்டார்கள்.நாட்டின் பொருளாதார நிலை அதிர்ச்சியளிக்கக்கூடிய விதத்தில் இருக்கிறது என்றும் அதனை நாம் எதிர்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் இந்த அவையில் கூறினார்.

கடந்த இருபதாண்டுகளாக நீங்கள் கடைப்பிடித்து வந்தசீர்திருத்தங்களின்காரணமாகப் பயன் அடைந்த முதலாளி வர்க்கத்தினரிடம் கேளுங்கள். அவர்களுக்கு அளித்த சலுகைகளைத் திரும்பப் பெறுங்கள். அவர்கள் அரசுக்குச் செலுத்தாமல் இருக்கும் நேரடி மற்றும் கார்ப்பரேட் வரித் தொகைகளில் பாதியையாவது வசூல் செய்திடுங்கள். சுமார் ஐந்து லட்சம் கோடிரூபாய் அவர்கள் அரசுக்கு செலுத்தாமல் வேண்டும். குறைந்தபட்சம் இதில் பாதியையாவது வசூல் செய்யுங்கள். அன்றாடம் பாடுபடும் ஏழை நடுத்தரத் தொழிலாளிகளை விட்டுவிடுங்கள். நான் என்னதான் வேண்டுகோள் விடுத்தாலும் அது கேளாக்காதில் ஊதியசங்கு போன்றதுதான் என்பது எமக்குத் தெரியும். இச்சட்டமுன்வடிவின்மீது சில திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கிறோம். அவற்றை நிறை வேற்றித்தருமாறு உறுப்பினர்களைக் கேட்டுக் கொள்கிறேன். திருத்தங்கள் இன்றி இச்சட்டமுன்வடிவை நிறைவேற்றி தொழிலாளர்களின் வாழ்வைச்சூறையாட அனுமதிக்கக் கூடாது.            தீக்கதிர்.. . 

No comments: